ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்.. நாள் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. திமுக முக்கிய அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல்வர் பிரச்சாரம் செய்யும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிப்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சார களம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. முக்கிய கட்சிகள் உட்பட சுயேட்சைகளும் களத்தில் இருப்பதால், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதேபோல் அதிமுக தரப்பில் இடைத்தேர்தலில் வெற்றிபெற தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்து வரும் திமுக தலைவர்கள்
அதேபோல் திமுக தரப்பில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் 11 அமைச்சர்கள் களமிறக்கப்பட்டு வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வரும் நாட்களில் திமுகவின் முக்கியத் தலைவர்களான ஆ.ராசா, கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகள்
அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் பாலகிருஷ்ணன், சிபிஐ முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.

முக ஸ்டாலின் பிரச்சாரம்
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ம் தேதி வெட்டிக்காடு வலசு, நாச்சாயி டீ கடை, சம்பத் நகர் உள்ளிட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், பிப்.25ம் தேதி ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications