நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக.. வேகமெடுக்கும் மு.க.ஸ்டாலின்.. நாளை முக்கிய மீட்டிங்!
சென்னை: திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
நாட்டின் 18வது மக்களவை தேர்தல் வரும் 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.
அதன்படி அண்மையில் சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டார். அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனிடையே பாஜக தரப்பில் அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக உத்தரவு
இந்த நிலையில் திமுக தரப்பில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இரண்டு மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி முகவர்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. காணொலி வாயிலாக நடக்கவுள்ள இந்த ஆலோசனை கூட்டம் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

மு.க. ஸ்டாலின் ஆலோசனை
மேலும், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் கூறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை திமுக தொடரும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications