செஸ் ஒலிம்பியாட்.. டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லிக்கு பயணம் செல்கிறார்.
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. வரும் 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக முன்னேற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஜோதி ஓட்டம்
இதுமட்டுமல்லாமல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாடு முழுவதும் விளம்பரப்படுத்தும் வகையில் ஒலிம்பிக் தொடருக்கு மேற்கொள்ளப்படும் ஜோதி ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர மோடி ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அந்த ஜோதி, பல்வேறு நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்
இதனிடையே தமிழக அரசு சார்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் செஸ் போட்டிகளை நடத்தி, அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நேரில் காணும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழிப்புணர்வு மாரத்தான், பேனர்கள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும் மாமல்லபுரத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் மாற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிக்கெட் எவ்வளவு?
செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு அரங்கில் ரூ.200-ஆகவும், மற்றொரு அரங்கில் ரூ.300-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் முழுவதும் போட்டியை பார்க்கும் இந்தியர்களுக்கு, அரங்குக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.3,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் வெளிநாட்டினருக்கு, அரங்குக்கு ஏற்ப ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மு.க.ஸ்டாலின் பயணம்
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28ம் தேதி சென்னை வருவார் என்று கூறப்பட்டது. இதற்காக நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழாவுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதில் சர்வதேச செஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications