சிறுவாணியில் நீர் சேமிப்பை அதிகரிக்க வேண்டும்.. பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
சென்னை: சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை அதிகரிக்கக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தற்போது கோவை மாநகராட்சிக்கான மொத்த நீர் தேவையான 265 மில்லியன் லிட்டரில், 101.4 மில்லியன் லிட்டர் சிறுவாணி அணையை ஆதாரமாகக் கொண்டு இருக்கிறது. சிறுவாணி அணையிலிருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் குடிநீர் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த 6 ஆண்டுகளில் கேரள அரசு 0.484 டி.எம்.சி. தண்ணீரில் இருந்து 1.128 டி.எம்.சி அளவிற்குத்தான் தண்ணீர் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சிறுவாணி தண்ணீர் விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக, சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவிற்கு மழை பெய்துள்ளபோதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை முழு நீர்த்தேக்க மட்டத்திற்குப் பதிலாக இருப்பு நிலையைக் குறைத்து பராமரிக்கிறது என்பது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் குறைவதால், இத்திட்டப் பயனாளிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட அளவைவிட குறைந்த அளவில்தான் தண்ணீரை வழங்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிறுவாணி அணையில் முழு நீர்த்தேக்கம் வரை நீரைச் சேமித்து வைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கேரள அரசின் நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரையும் அணுகியிருக்கிறோம்.
பலமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, 878.50 மீட்டர் அளவிற்கு, அதாவது முழு நீர்த்தேக்கமட்டம் வரை சிறுவாணி அணையின் நீர் இருப்பின் மட்டத்தைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முழுக் கொள்ளளவிற்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால், சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் அடுத்த கோடைகாலத்தில் கடுமையாகப் பாதிக்கப்படும்.
எனவே சிறுவாணி அணை விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆணையிட வேண்டும் என்று கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.