பஹ்ரைனில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்கிட வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள் அறிவிப்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (26-9-2024) எழுதியுள்ள கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டிற்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த 11-9-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களது வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications