மீண்டும் தென்னை நல வாரியம்! முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை! யாருக்கு தலைவர் பதவி? அலைமோதும் விஐபிக்கள்!
சென்னை: தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் மிகுந்த இன்னலை சந்தித்து வரும் சூழலில், மீண்டும் தென்னை நல வாரியம் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தென்னை நல வாரியத்தை ஏற்கனவே கருணாநிதி உருவாக்கியிருந்தாலும் கூட காலப்போக்கில் அது செயல்பாடற்ற ஒரு அமைப்பாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக முக்கியப் பிரமுகர்களே தென்னை நல வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

தேங்காய் விலை
தேங்காய் ஒன்றின் விலை கடைகளில் ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது என்றால், தென்னை விவசாயிகளிடம் வியாபாரிகள் வாங்கும் விலையோ ரூ.8 முதல் ரூ.12 வரை மட்டுமே. மிஞ்சிப்போனால் காய் கொஞ்சம் பெரிதாக இருந்தால் அதிகபட்சம் ரூ.15 கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். அதுவும் ஒது பொள்ளாச்சி காய்களுக்கு மட்டுமே பொருந்தும். இதேபோல் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.110 ஆதார விலையாக அரசு நிர்ணயித்திருந்தாலும் கூட ரூ.75 முதல் ரூ.85 வரை மட்டுமே சந்தையில் விலை கிடைக்கிறது.

தென்னை விவசாயிகள்
இதனால் தென்னை விவசாயிகள் குப்பை வைத்து மரங்களை பராமரிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறார்கள். இந்தச் சூழலில் தான் தேங்காய் விலை வீழ்ச்சியை சரி செய்யும் விதமாக அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதேபோல் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூட இதைத் தான் வலியுறுத்துகிறார்.

முதல்வருக்கு கடிதம்
அதேபோல் தென்னை விவசாயிகளின் பிரச்சனைகளை பேசி தீர்வு காண தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக முக்கியப் பிரமுகர்கள் பலரும், முதல்வரிடம் இது தொடர்பாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஒரு படி மேலாக சென்று முதல்வருக்கு கடிதமே எழுதியிருக்கிறார்.

முதல்வர் முடிவு
இதனால் மீண்டும் தென்னை நல வாரியம் ஆக்டிவாக இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, அந்த வாரியத்துக்கு யாரை தலைவராக நியமிக்கலாம் எனப் பார்த்தால், நூற்றுக்கணக்கானோர் எனக்கு வேண்டும் என முட்டி மோதுகிறார்களாம். இதனிடையே இது குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுத்து நல்லதொரு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications