சென்னை ரேஷன் கடையில் முதல்வர் திடீர் விசிட்! மாஸ்க் போடாதவர்களை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக வழங்கப்படுகிறதா என சென்னை ராயபுரம் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் முகக்கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு முதல்வரே முகக் கவசங்கள் வழங்கினார்.
Recommended Video
பொங்கல் பரிசு சிறப்பாக கொண்டாடும் வகையில் இருபத்தியொரு பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.
அரிசி நெய் ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் எனவும் கூறிய முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசுத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புக்கு இடையே இந்தப் பணியானது நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களை பெற்று சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் புகார்
இந்நிலையில் தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமற்றதாக இருப்பதாகவும், வெல்லம் போன்றவை உருகிய நிலையில் உள்ளதாகவும், ஒரு பரிசு தொகுப்பில் இருந்த வெல்லத்தில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இது குறித்து பேசியிருந்தனர். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இந்த நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் இது குறித்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கூறியிருந்தார் மேலும் அறிவிப்போடு நின்று விடாமல் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து நேரடியாக களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

முதல்வர் திடீர் ஆய்வு
கடந்த இரு நாட்களாக சென்னை சத்யா நகர் பகுதியில் ஆய்வு செய்த முதல்வர் இன்று சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா அதிலுள்ள பொருட்கள் தரமாக உள்ளதா என ஆய்வு நடத்திய முதல்வர், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். தொடர்ந்து மக்களுக்கு முறையாக பரிசுத் தொகுப்புகளை வழங்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய முதல்வருக்கு அப்பகுதி மக்கள் நன்றி கூறினர். அப்போது சிலர் முகக் கவசங்கள் அணியாமல் இருந்ததைக் கண்ட முதல்வர் அவர்களுக்கு முகக் கவசங்களை தானே வழங்கியதோடு, எப்போதும் வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து தான் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தினார். முதல்வரின் இந்த திடீர் வருகையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications