சேலம் செல்ல நான் ரெடி! நீங்க ரெடியா? எனது கண்கள் உங்கள் முகங்களை தேடும்! ஸ்டாலின் உற்சாகம்!
சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சேலம் செல்ல நான் ரெடி! நீங்க ரெடியா? எனக் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் திமுக இளைஞரணி நிர்வாகிகளை பார்க்கும் போது தனக்குள் உற்சாகமும் - புத்தெழுச்சியும் பிறப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு;

''இளைஞரணியின் எழுச்சிமிகு இரண்டாவது மாநாடு சேலத்தில் சனவரி 21-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. சேலத்துக்கு வர நான் தயாராகிவிட்டேன். நீங்கள் தயாராகிவிட்டீர்களா? என்னைப் பார்க்கும்போது உங்களுக்குள் எப்படி ஒரு உற்சாகமும் புத்தெழுச்சியும் பிறக்கிறதோ...
அதேபோல் உங்களைப் பார்க்கும்போது எனக்குள்ளும் உற்சாகமும் - புத்தெழுச்சியும் பிறக்கிறது! கழக உடன்பிறப்புகளான உங்களின் முகங்களைப் பார்ப்பதும் - நீங்கள் எழுப்பும் கொள்கை முழக்கங்களைக் கேட்பதும் தான் - எனக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும் விஷயங்கள்!
இன்று நேற்று அல்ல; 1980ல் இருந்தே இது எனக்கு பழக்கமாகிவிட்டது! எப்போது தலைவர் கலைஞரும் இனமானப் பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கி, என்னிடம் ஒப்படைத்தார்களோ, அன்றில் இருந்து, தொண்டனுக்குத் தொண்டனாக, உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பாக தான் செயல்பட்டு வருகிறேன். இன்றைக்குக் கூட, கழகத் தலைவராக அல்ல, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.
கொள்கை உறவு உடன்பிறப்புகளின் மாநாடு தான் சேலம் மாநாடு. 2007ஆம் ஆண்டு திக்கெட்டும் புகழும் திருநெல்வேலிச் சீமையில்
இளைஞரணியின் முதல் மாநாட்டை நான் தலைமை வகித்து நடத்திக் காட்டினேன். இப்போது 2024ஆம் ஆண்டு சீர்மிகு சேலத்தில் இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி சிறப்போடு ஏற்பாடு செய்து நம்மை எல்லாம் அழைத்திருக்கிறார்.
இளைஞரணி மாநாட்டின் நோக்கம் மாநில உரிமைகளை வென்றெடுப்பது என்று இளைஞரணிச் செயலாளர் உதயநிதி திட்டமிட்டிருக்கிறார். மாநில உரிமைகளைக் காப்பதுதான் இந்தியாவைக் காப்பது! அந்த வகையில் இளைஞரணி மாநாடு, இந்தியாவின் மாநாடு என்று சொல்லத்தக்க வகையில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.
இந்திய நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும், இந்தியா கூட்டணியின் ஆட்சி, மாநில உரிமைகளை மதிக்கிற ஆட்சியாக அமைய வேண்டும்; அமையும்! இதற்கெல்லாம் தொடக்க மாநாடாகச் சேலம் மாநாடு அமையப் போகிறது.
எனது உடன்பிறப்புகளே! கழக உடன்பிறப்புகளே! கலைஞரின் உடன்பிறப்புகளே! சேலம் செல்ல நான் தயாராகிவிட்டேன்! நீங்களும் தயாராகிவிட்டீர்களா? சேலத்தில் எனது கண்கள், உங்களது முகங்களைத்தான் தேடும்! சேலத்தில் சந்திப்போம்!''












Click it and Unblock the Notifications