திண்டுக்கல் லியோனி நடத்திய புத்தக வெளியீட்டு விழா! எட்டிக்கூட பார்க்காத 2 திண்டுக்கல் அமைச்சர்கள்!
சென்னை: ''வளர்ந்த கதை சொல்லவா'' என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி எழுதிய புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் வெளியிட்டார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகிய இருவருமே கலந்து கொள்ளவில்லை.
பெயரிலேயே திண்டுக்கல் என்ற ஊரிருந்தும் சொந்த ஊர் அமைச்சர்கள் விழாவுக்கு வராதது லியோனி தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் லியோனி
பட்டிமன்ற நடுவர், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர், திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என பல முக்கியப் பதவிகளில் இருப்பவர் திண்டுக்கல் லியோனி. இவரது நவரசமான பேச்சுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. பெயரிலேயே திண்டுக்கல் என்ற ஊரிருந்தும் திண்டுக்கல் அரசியலில் தலைக்காட்டாதவர் லியோனி. இந்நிலையில் தாம் வளர்ந்த கதையை ''வளர்ந்த கதை சொல்லவா'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதிய திண்டுக்கல் லியோனி அந்த புத்தக வெளியீட்டு விழாவை நேற்று சென்னையில் நடத்தினார்.

2 அமைச்சர்கள்
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி.ஆகியோர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் லியோனி எழுதிய புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட டி.ஆர்.பாலு அதனை பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் மண்ணின் மைந்தர்களான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகிய இருவருமே கலந்து கொள்ளவில்லை.

கட்சிப் பணிகள்
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் இந்த விழாவில் தலைக்காட்டவில்லை. அமைச்சர் சக்கரபாணியாவது மாவட்டச் செயலாளராக இருப்பதால் அவருக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா, புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் உள்ளிட்ட பணிகள் மாவட்டத்தில் இருந்ததால் அவர் வரவில்லை என்று காரணம் கருதலாம். ஆனால் திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த விழாவை தவிர்த்துவிட்டு திண்டுக்கல் சென்றது தான் ஹைலைட்.

திண்டுக்கல் லியோனி
சொந்த ஊர் அமைச்சர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும் தனது அழைப்பையேற்று முதலமைச்சரே விழாவில் கலந்துகொண்டு தாம் எழுதிய புத்தகத்தை வெளியிட்டது திண்டுக்கல் லியோனிக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications