கருணாநிதி விரும்பிய வாழ்க்கை இது தான்! உண்மையை உடைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தாம் இல்லாத பிறகும் தாம் நினைக்கப்பட வேண்டும் என்பது தான் கருணாநிதி விரும்பிய வாழ்க்கை என முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 'கருணாநிதி வரலாறு' மற்றும் 'திராவிடமும் சமூக மாற்றமும்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அந்த விழாவில் முதல்வர் பேசியதாவது;
வாரிசு இல்லாதவங்க புலம்புறாங்க.. கருணாநிதி பேச்சு + ஸ்டாலின் நிர்வாகம் = உதயநிதி: அமைச்சர் பூரிப்பு
யார் அறிவாளி
யார் அறிவாளி என்பதற்கு இந்திய அறிவுலக மேதையான புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், "எவர் ஒருவரின் அறிவு, அவர் வாழும் சமுதாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்தான் உண்மையான அறிவாளி!" என்று சொல்லி இருக்கிறார். நடுநிலையான பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவதை மட்டுமே தங்களது பணி என்றும், அதனால் சிலரிடம் கிடைக்கும் அங்கீகாரம்தான் தங்களுக்கான வாழ்நாள் பாராட்டென்றும் நினைப்பவர்கள் இந்தக் காலத்தில் உண்டு.எந்த காலத்திலும் உண்டு.
3 வாழ்க்கை
அப்படிப்பட்ட காலத்தில், நேர்மறையாகப் பார்த்து எழுதி, நடுநிலையாளர்கள் மனதில் திராவிட இயக்கம் குறித்த சரியான பார்வையை விதைக்க பத்திரிகையாளர் பன்னீர்செல்வன் அவர்களின் ஆங்கில எழுத்துகள் பயன்பட்டிருக்கின்றன. ''ஒவ்வொருவருக்கும் 3 வாழ்க்கை உண்டு. ஒன்று பொதுவாழ்க்கை, இரண்டாவது தனி வாழ்க்கை, மூன்றாவது ரகசிய வாழ்க்கை...'' என்று கொலம்பியா எழுத்தாளர் மார்க்வேல் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மார்ட்டின் கூறியதை பத்திரிகையாளர் பன்னீர்செல்வன் தலைவர் கலைஞரிடத்திலே சொல்லியிருக்கிறார்.
கலைஞர் விரும்பிய வாழ்க்கை
அப்போது கலைஞர் அவர்கள், 'பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நான்காவதாக ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதுதான் அவர் வாழ விரும்பிய வாழ்க்கை' என சொல்லியிருக்கிறார். எவ்வளவு ஆழமான, அழகான கருத்து. தலைவர் கலைஞர் அவர்கள் வாழ விரும்பிய வாழ்க்கை என்ன என்று நான் சிந்தித்தேன்... தான் இல்லாத பிறகும் தான் நினைக்கப்பட வேண்டும் என்பதுதான் கலைஞர் அவர்கள் விரும்பிய வாழ்க்கையாக இருக்கக்கூடியது. அதற்கான உழைப்பைத்தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் அளித்தார்.
மாற்றத்தை நோக்கி
ஆயிரம் ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியதல்ல. அதனை நாமும் அறியாதவர்கள் அல்ல. மாற்றத்தை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். அதனால்தான், சாதியின் பேரால் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது - தெருவில், கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன.
வேலையும், பதவியும்
கல்வியும், வேலையும், பதவியும் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் லகானைக் கொடுத்துவிட்டது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றம்!கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என பலவும் ஜனநாயக மயமானது. இந்த முன்னோக்கிய பாய்ச்சலில்தான் சமூகம் ஜனநாயக மயமாக வேண்டும்.
சோ அன்று சொன்னார்
''கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பற்ற அரசியலுக்கும் இனி ஆற்றல் அற்றுப் போகும்" என்று 1991-ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ.இராமசாமி சொன்னதாக பன்னீர்செல்வன் எழுதி இருக்கிறார். கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பின்மைக்கும் -சுயமரியாதைக்கும்- மாநில சுயாட்சிக்கும்- மொழி இன உரிமைக்கும் ஆற்றல் என்றும் அற்றுப் போகாது என்பதன் அடையாளம்தான் இன்றைய திராவிட மாடல் ஆட்சி!
ஆற்றல் அற்றுப் போய்விடவில்லை என்பதன் அடையாளம்தான் இத்தகைய புத்தகங்கள்.