தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கு அடையாளம் அழகு முத்துகோன்! முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
சென்னை: இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் வீரரான மாவீரன் அழகுமுத்து கோனின் 313வது பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் நேரில் வந்து அழகு முத்துகோன் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் திமுகவில் உள்ள யாதவ சமுதாய முக்கியப் பிரமுகர்களான அமைச்சர் ராஜகண்ணப்பன், நெல்லை துணை மேயர் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் யாதவர் சமுதாயத்தினரின் வாக்கு வங்கியை குறைத்து மதிப்பிட முடியாத நிலை உள்ளது. இதனால் தான் திமுக, அதிமுக, உட்பட அனைத்துக் கட்சிகளின் சார்பில் அழகு முத்துகோன் சிலைக்கு தவறாமல் மரியாதை செலுத்தப்படுகிறது.
அரசு சார்பில் மரியாதை செலுத்தியது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது; ''தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ் மங்காது ஒளி வீசிடும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்டால் உயிர்ப்பிச்சை தருவதாக ஆங்கிலேயர்கள் தெரிவித்த நிலையில் "அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிரைவிடுவோம்" என்று கம்பீரமாக முழக்கமிட்டவர் வீரன் அழகுமுத்துக்கோன் என்பது வரலாறு. இதனால் தான் இவர் மாவீரன் அழகு முத்துகோன் என அழைக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications