உலகெங்கும் ஐடி துறையில் கொடிக்கட்டி பறக்கும் தமிழக இளைஞர்கள்! யார் அமைத்த அடித்தளம்?
சென்னை: கிராமப்புற மாணவர்கள் கணினி இயந்திரத்தையே நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அரசுப் பள்ளிகளில் அதனை பாடமாக கொண்டு வந்தவர் கருணாநிதி என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். அதன் விவரம் வருமாறு;

• திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர்.
• அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை - எளிய மாணவர்கள் கணினி எனும் இயந்திரத்தையே நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அவர்களுக்குக் கணினிக்கல்வி தந்தார்.
• 1999-2000-ஆம் ஆண்டே, பள்ளிப் பாடத்திட்டத்தில் மட்டுமின்றி, கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்வி பாடத்திட்டங்களிலும் கணினிப் பாடத்தை அவர் கொண்டுவந்தார்.
• 1996-2001 ஆட்சிக் காலத்திலேயே 'Empower IT' என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பட்டிதொட்டிகள் எல்லாம் கலைஞர் கொண்டு சென்றார்.
• அப்போதே Mobile Governance, e-Governance போன்றவை அரசு அலுவலகங்களில் - அரசு சேவைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
• தமிழ்நாட்டில் IT Professionals ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தார்.
• தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டினார்.
• தகவல் தொழில்நுட்பத்துக்கு எனத் தனித் துறையையும் 1998-ஆம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்குத் தனி அமைச்சரையும் நியமித்தார்.
• கணினி என்ற பெயர் தமிழ்நாட்டிலுள்ள மக்கள் எல்லோரையும் சென்றடைவதற்கு முன்னதாகவே, டைடல் பூங்காவைத் தமிழ்நாட்டில் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். 1997ல் தரமணியில் டைடல் பூங்காவை உருவாக்கிட அதற்கெனப் புதுக் கொள்கையினை உருவாக்கி, ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக அதனைக் கட்டி, 2000-ஆம் ஆண்டில் அதனைத் திறந்து வைத்து, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தார் அவர்.
1996-ஆம் ஆண்டு முதலமைச்சராகக் கலைஞர் இருந்தபோது தொடங்கிய தகவல் தொழில்நுட்பப் புரட்சிதான் கடந்த 30 ஆண்டுகள் அத்துறை மகத்தான வளர்ச்சியைப் பெறுவதற்குக் காரணமாகும். உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்குக் கலைஞர் தான் அடித்தளம் அமைத்தார்.












Click it and Unblock the Notifications