பள்ளி அருகே டாஸ்மாக்.. தனி ஆளாக போராடிய மாணவி.. சில மணி நேரத்தில் பறந்த தலைமை செயலாளரின் உத்தரவு
சென்னை: அரியலூரில் தனது பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக நீக்க வேண்டும் என 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் சில மணி நேரத்தில் அந்த டாஸ்மாக் கடையை நீக்கத் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.
இடையில் கடந்த ஆண்டு இறுதியில் சில வாரங்கள், அதுவும் 10 மற்றும் 12 வகுப்பினருக்கு மட்டும், பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது கொரோனா 2ஆம் அலை உச்சம் பெறவே மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
'2031இல் ஆட்சி நமதே.. நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு..' தெறிக்கவிடும் மதுரை விஜய் ஃபேன்ஸ்
தமிழ்நாடு அரசு
இந்த சூழலில் கொரோனா பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இத்துடன் வேக்சின் பணிகளும் இணைந்து கொள்ளவே பல மாநிலங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் 9 முதல் +2 வரையிலான வகுப்புகள் கடந்த செப். 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
பள்ளிகள் திறப்பு
அதேபோல இதர வகுப்புகளுக்கு வரும் நவம்பர் 1ஆம் தேதி வரை வகுப்புகளைத் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தச் சூழலில் பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை நீக்க வேண்டும் என அரியலூர் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் கோரிக்கையை ஏற்று, அந்த குறிப்பிட்ட கடையை மூடுமாறு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தனி ஆளாகக் போராடிய மாணவி
அரியலூரில் மாவட்டத்தில் உள்ள நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளியின் அருகிலேயே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 6ஆம் வகுப்பில் படிக்கும் மாணவி தனது கைப்பட எழுதிய மனுவோடு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த புகைப்படம் மற்றும் கோரிக்கை மனு ஆகியவற்றைத் தலைமைச் செயலாளர் வெ. இறையன்புக்கு வாட்ஸ்அப் மூலம் பத்திரிக்கையாளர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்.
தலைமைச் செயலாளர் உத்தரவு
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட தலைமைச் செயலாளர் வெ இறையன்பு, பள்ளிக்கூடம் அருகே உள்ள மதுபானக் கடையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அந்த டாஸ்மாக் மதுபானக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். கடையை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவியும் பாராட்டு
6ஆம் வகுப்பு மாணவி புகார் அளித்த வெறும் சில மணி நேரங்களிலேயே தலைமைச் செயலாளரே தலையிட்டு, குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மாணவ, மாணவியர் மீதான அக்கறையிலும் பொது மக்கள் நலனிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் தலைமைச் செயலாளருக்குப் பள்ளி மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.