நான் அரசு ஊழியன்; அரசியல்வாதியல்ல... திமுக புகாருக்கு தலைமைச்செயலாளர் சண்முகம் மறுப்பு
சென்னை: திமுகவையோ, எதிர்க்கட்சித் தலைவரையோ அவமதிக்கும் எண்ணம் தனக்கு எள்ளளவும் இல்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று பரபரப்பு புகார் கூறிய நிலையில் இன்று அவர் அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
டி.ஆர்.பாலு எம்.பி. பத்திரிகையில் திரித்து பேசுவது தனக்கு மன வேதனை அளிப்பதாக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது;

அவமதிக்கவில்லை
''எதிர்க்கட்சித் தலைவர் மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவன். அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை என்பதால்தான் கடுமையான கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையிலும் மாவட்ட ஆட்சியர் கூட்டம் முடிந்து 2.30-க்கு எனது அறைக்கு வந்தவுடன் மாலை 5 மணிக்கு திமுக எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கினேன்''.

அதிர்ச்சியாக இருந்தது
''மத்திய நிதி அமைச்சரின் நிவாரண திட்ட அறிவிப்புகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிகொண்டிருந்த போது திமுக எம்.பி.க்கள் வந்த தகவலறிந்து நிதித்துறை செயலாளரை குறிப்பெடுக்க கூறிவிட்டு இவர்களை வரவேற்று சோபாவில் அமரவைத்தேன். அப்போது அவர்களுடன் வந்த 15-20 பேர் பெரிய பெரிய மனுக்கள் அடங்கிய கட்டுக்களை எனது அறைக்குள் கொண்டு வந்தனர். கொரோனா பரவி வரும் சூழலில் திடீரென இத்தனை நபர்கள் எனது அறைக்குள் வந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது''.

ஒரு லட்சம் மனுக்கள்
''ஒரு லட்சம் மனுக்கள் இருப்பதாக கூறிய டி,ஆர். பாலு எத்தனை நாட்களுக்குள் அதனை அலுவலர்களுக்கு அனுப்புவீர்கள் எனக் கேட்டார். நான் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினேன். ஆனாலும் டி ஆர் பாலுவும், தயாநிதி மாறனும் தேதியை கூறுங்கள் என எனக் கேட்டனர். ஒரு லட்சம் மனுக்கள் இருப்பதால் அவற்றை அலுவலர் வாரியாக பிரிக்க வேண்டும், தற்போது கொரோனா பாதிப்பால் குறைந்தபட்ச அலுவலர் தான் பணி செய்கின்றனர் என்றேன். பணியாளர் குறைவாக உள்ளதாக நான் கூறவா என டி ஆர் பாலு என்னிடம் கேட்டார். அலுவலர் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகிறோம் எனத் தெரிவித்தார்.''

உண்மை இல்லை
''அதற்கு, எங்களின் சங்கடங்களை புரிந்துகொள்வதில்லை; இது தான் உங்களிடம் உள்ள பிரச்சனை எனக் கூறி நீங்கள் எதை வேண்டுமானாலும் பத்திரிகையிடம் கூறிக்கொள்ளுங்கள், எனக்கு ஆட்சேபனை இல்லை இல்லை எனத் தெரிவித்தேன். மற்றபடி அவர்களை அவமதிக்கு எண்ணம் எனக்கு இல்லை. அவர்கள் கூறுவதை போல், பேசிக்கொண்டிருந்த போதே தொலைக்காட்சியை பார்த்தேன் எனக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. நான் எனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த போதே டிவி சத்தத்தை குறைத்துவிட்டு தான் வந்தேன்.''

அரசு ஊழியன்
''மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகளை நிதிச்செயலாளர் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தார். இதனால் எங்கள் பேச்சுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. நான் ஒரு சாதாரணமான அரசு ஊழியன் ; அரசியல்வாதியல்ல, மக்களுக்கு பணியாற்றுவது தான் என் வேலை; யாரையும் உதாசீனப்படுத்த வேண்டும் என எந்தக்காலத்திலும் நினைத்தது இல்லை''.
''இத்தகைய சூழலில் பத்திரிகையில் திரித்து பேசுவது மன வேதனை அளிக்கிறது. யார் உண்மையை பேசுகிறார்கள்? யார் திரித்து பேசுகிறார்கள்? என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், மக்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.''












Click it and Unblock the Notifications