கொடுமை.. அதி வேகமாக வந்த தண்ணீர் லாரி.. குழந்தை பலி.. சடலத்துடன் லாரியைத் துரத்திய தாய்!
Recommended Video
சென்னை: சென்னை வில்லிவாக்கம் அருகே தனது குழந்தையை ஏற்றி கொன்ற தண்ணீர் லாரியை தாய் ஒருவர் குழந்தையின் சடலத்துடன் கண்ணீருடன் துரத்திபிடித்த சம்பவம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது. டிரைவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் குடிபோதையில் வண்டியை ஓட்டியது தெரிய வந்தது.
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் வடக்கு ஜெகநாதன் நகர் பகுதியில் வசித்து வருபவர் கலைவாணன் (27), இவரது மனைவி லட்சுமி (24). இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் மோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது லட்சுமி 7 மாத கர்ப்பமாக வேறு உள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் குழந்தை மோகித்திற்கு நேற்று இரவு உணவு கொடுப்பதற்காக லட்சுமி வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி வீட்டின் முன் நின்று கொண்டு இருந்த குழந்தை மீது மோதி ஏறியது. இதில் தாய் லட்சுமி கண் முன்பாகவே குழந்தை உயிர் இழந்தது.
[துர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்! 'ஹைஅலர்ட்' பிறப்பிப்பு]
குழந்தையை ஏற்றி கொன்றுவிட்டு நிற்காமல் லாரி செல்வதை கண்ட லட்சுமி தன் ஒரு கையால் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை வாரி அணைத்து கொண்டு, அலறியபடி குழந்தையை கொன்ற லாரியை பிடிக்க ஓடினார். இந்த காட்சி காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியது. அங்குள்ள மக்களும் திரண்டு வந்து லாரியைத் துரத்தி மடக்கிப் பிடித்தனர்.
சிக்கிய லாரியை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். லாரி டிரைவரையும் பிடித்தனர். பின்னர் லாரி டிரைவரையும், லாரியையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். விசாரணையின்போது லாரி டிரைவர் மணிகண்டன் (25 வயதுதான்) குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.