தமிழகத்தின் வேதாரண்யம்... இலங்கையில் இருந்து குறிவைக்கும் சீனா, பாக்... முல்லைத்தீவில் காலூன்ற சதி!
சென்னை/யாழ்ப்பாணம்: இலங்கையில் இருந்து தமிழ்நாட்டின் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்கும் வகையில் முல்லைத்தீவில் காலூன்றுவதற்காக ரகசிய நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவதாக ஈழத் தமிழ்த் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இலங்கையை மையமாக வைத்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் வியூகம் வகுத்து வருகின்றன. இலங்கையின் தென்பகுதியில் சிங்களர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இலங்கைக்கு பெருந்தொகையாக கடன் கொடுத்து அம்பாந்தோட்டா துறைமுகம், கொழும்பு துறைமுகம் பகுதிகளை சீனா கைப்பற்றிவிட்டது.
ஆதிவாசி VS வனவாசி.. பாஜகவின் புதிய வார்த்தை பிரயோகம்! யாத்தரையில் சரமாரியாக தாக்கிய ராகுல்காந்தி!
சீனாவின் ஊடுருவல்
இதனைத் தொடர்ந்து ஈழத் தமிழர்களின் தாயகப் பரப்பான வடக்கில் காலூன்ற சீனா பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. தமிழகம், ஈழத் தமிழ் மீனவர்களிடையேயான பிரச்சனையில் சீனா தலையிட தொடங்கி உள்ளது. ஈழத் தமிழ் மீனவர்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்களை சீனா வழங்கி, தமிழக மீனவர்களுக்கு எதிராக கொம்பு சீவுகிறது சீனா. இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, சீனாவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டு இந்த சதிச் செயலை அரங்கேற்றி வருகிறார்.
இந்தியாவின் எதிர்ப்பு
இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் சீனா தூதர் ஆய்வு நடத்தி இருந்தார். அப்பகுதிகளில் நின்று கொண்டு இந்தியா எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என கேள்வி கேட்டிருந்தார் சீனா தூதர். சீனாவின் இந்த வாலாட்டுத்தனத்துக்கு இந்தியா கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தது. ஆனாலும் இலங்கை- சீனா சதி தொடர் கதையாகத்தான் இருந்து வருகிறது.
களத்தில் பாகிஸ்தான்
இப்போது இந்த கோதாவில் சீனாவுடன் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர், பாகிஸ்தான் தூதர், ஈழத் தமிழரின் தாயகப் பகுதியான வடக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கிருந்து இந்தியாவின் நிலப்பரப்பு தொடர்பாக ஆய்வும் நடத்தி இருக்கிறார். பாகிஸ்தானைப் பொறுத்தவரை தமது பயங்கரவாத சதிகளுக்கு களமாக இலங்கையை பயன்படுத்தி வருகிறது. இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் கடல்வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவும் பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
முல்லைத்தீவு டூ வேதாரண்யம்
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பகுதியில் சீனா ரகசியமாக காலூன்றும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாம். முல்லைத்தீவின் சாலை என்ற பகுதியைத்தான் இப்போது சீனா குறி வைத்திருக்கிறதாம். சீனா குறிவைத்திருக்கும் சாலை பகுதியானது தமிழ்நாட்டின் வேதாரண்யத்துக்கு நேர்கோட்டில் இருக்கக் கூடியது. சாலையில் கால் பதித்தால் வேதாரண்யம் அண்மித்த வங்க கடலை உளவு பார்க்க முடியும் என்பது சீனாவின் கணக்கு.
என்ன செய்யும் இந்தியா?
முல்லைத்தீவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கட்சித் தலைவர் கதிர், சாலையில் சீனா காலூன்றுவது குறித்து விரிவாக விளக்கி இருக்கிறார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும் கதிர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் சீனா, பாகிஸ்தான் நாடுகள், ஈழத் தமிழரை மையமாக வைத்து இந்தியாவுக்கு எதிரான சதிகளை திட்டம் தீட்டுகின்றன. இந்தியா எப்படி முறியடித்து வெற்றி கொடி நாட்டும்? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தியாவுக்கான வாய்ப்பாக இப்போதைக்கு இருப்பது, ஈழத் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு சிக்கல்தான். இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தந்தால் ஈழத் தமிழர் நிலப்பரப்பில் இந்தியா வலுவாக காலூன்ற முடியும். அனேகமாக இந்தியா இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கூடும் என்கின்றன இலங்கை தகவல்கள்.