பொறுமையாக, அகிம்சையை கையில் எடுத்து நடத்திய பாசப் போராட்டமே சின்னத்தம்பி வெற்றிக்கு காரணம்!
Recommended Video

சென்னை: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பொறுமையாக பாசப் போராட்டம் நடத்திய சின்னத்தம்பிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை வனத்துறையினர் பிடித்து வரகழியாறு வனப்பகுதியில் விட்டனர்.
சின்னத்தம்பி யானை தற்போது 100 கி.மீட்டர்களுக்கும் மேலாக பயணித்து, திண்டுக்கல் மாவட்டத்தை நெருங்கியது. உடுமலைப்பேட்டை அருகே மைவாடி குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வரும் இந்த யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

காரணம்
இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு சமூகவலைதளங்களிலும் கண்டனங்கள் வலுத்தன. யானைகளின் இருப்பிடங்களை அழித்து வீடுகளாக்கிவிட்டதன் விளைவே காட்டு விலங்குகள் ஊருக்குள் வர பெரிதும் காரணம் என்பது அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டு வருகிறது.

தான் உண்டு தன் வேலை உண்டு
இந்த சின்னத்தம்பியோ கோவை பகுதிகளில் சுற்றித் திரிந்த போது கூட யாருக்கும் எந்த வித தொல்லையும் கொடுக்கவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருந்தது. இதனால் சின்னத்தம்பி அப்பகுதியில் செல்லக்குட்டியாகவே வலம் வந்தது.

கும்கியாக மாற்றினால் கொலைக்கு சமம்
சுருக்கமாக சொல்ல போனால் சின்னத்தம்பி ஒரு பாசப் போராட்டத்தையே நடத்தியுள்ளது. இதனுடன் கொண்டு விடப்பட்ட விநாயகன் காட்டிலேயே இருக்கும் போது சின்னத்தம்பி மட்டும் திரும்பி வந்தது தனது பெற்றோர் மற்றும் இருப்பிடத்தை தேடிதான் என தெரிகிறது. இந்த வாயில்லா ஜீவனை கும்கியாக மாற்றினால் அது கொலை செய்வதற்கு சமம் என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

தமிழக அரசு உறுதி
இந்த நிலையில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனது இருப்பிடத்தை சேதப்படுத்தினாலும் யாருக்கும் எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாமல் அமைதியாக அகிம்சை முறையில் பாசப் போராட்டம் நடத்திய சின்னத்தம்பிக்கு கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது. பாசம், பந்தம் என்பது வாயில்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது என்பதை சின்னத்தம்பி நிரூபித்து விட்டது.












Click it and Unblock the Notifications