வில்லாவில் தங்கிய ஜோடி.. சித்ரா தற்கொலையின்போது ரூம் ஹாலில் இருந்த ஹேம்நாத்.. புதிய தகவலால் பரபரப்பு
விஜே சித்ரா நேற்று நசரத்பேட்டை அருகே உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அவரது உடலுக்கு இன்றுதான் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதில் வந்த அறிக்கையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. அவரது முகத்தில் இருந்த நகக்கீறல்கள் அவருடையதுதான் என்றும் போலீஸார் கூறினர்.
பெற்றோர் மறுப்பு
ஆனால் இதை சித்ராவின் நண்பர்களும், பெற்றோரும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். தைரியமான பெண்ணான சித்ரா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
விசாரணை
இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த கணவர் ஹேம்நாத், அவருடன் நடித்த நடிகர், நடிகைகள், பெற்றோர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வில்லாவில் தங்கிய சித்ரா
சித்ரா ஹேம்நாத் இருவரும் வில்லாவில் தான் தங்கியிருந்தனர். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஹேம்நாத்துடன்தான் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் பதற்றமாகவே சித்ரா பேசியதாக தெரிகிறது. பின்னர் குளித்துவிட்டு வருவதாக கூறி அறையை தாழிட்டுக் கொண்டுள்ளார்.
மாற்றுச் சாவி
அதன்பிறகுதான் அவர் வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை என்பதால் ஹோட்டல் ஊழியர்களை வைத்து மாற்று சாவி கொண்டு அறையை திறந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விவரங்கள் ஆர்டிஓ விசாரணையில் தெரிய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.