என் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டா? அமைச்சர் உதயநிதியின் வலதுகரம் சிற்றரசு மறுப்பு
சென்னை: அமைச்சர் உதயநிதியின் வலது கரமாக சொல்லப்படும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக வரும் செய்திகளை சிற்றரசு மறுத்துள்ளார்.
டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.

உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.
ஜாபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இயக்குநர் அமீர், பாசித் புகாரி உள்ளிட்டோரின் பெயர்களை வாக்குமூலமாக தெரிவித்திருந்தாராம். இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர், இயக்குநர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பினர். அதில் போதை பொருள்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைத்தனர்.
அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் காலை முதலே சென்னையில் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம், புகாரி ஹோட்டல், இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அமீரின் வீட்டிலிருந்து சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.
அந்த வகையில் அமைச்சர் உதயநிதியின் வலது கரமான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் நேரத்தில் இது போன்றதொரு விவகாரம் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சிலர் கூறி வந்தனர். ஆனால் இந்த அமலாக்கத் துறை சோதனையை சிற்றரசு மறுத்துள்ளார். "என் வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை" என சிற்றரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications