சினிமா பைனான்சியர் போத்ராவின் மகன் ககன் போத்ரா அதிரடி கைது.. சென்னை திநகரில் பரபரப்பு!
சென்னை: மறைந்த சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் நிதி நிறுவனம் மற்றும் வைர மதிப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வந்தவர் முகுந்த் சந்த் போத்ரா. இவர் சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்களுக்கு வட்டிக் கடன் கொடுத்து வந்தார்.

இவருக்கு உதவியாக மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோர் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முகுந்த் சந்த் போத்ரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய மகன்கள்தான் அந்த தொழிலை கவனித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ககன் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். விசாரணையில் சென்னை விஜயராகவா சாலையில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார் ககன் போத்ரா. இவர் சில ஆண்டுகளாக வாடகை கொடுக்காமலும் வீட்டை காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து உரிமையாளர் பாலமணி பல முறை வாடகை கேட்டு கொடுக்காத நிலையில் ஒரு முறை திடீரென ககன் போத்ரா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ககன் போத்ரா மீது வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ககன் போத்ராவிடம் விசாரித்த போது இந்த வீட்டில் நான் வாடகைக்கு இருக்கவில்லை.
லீசுக்கு இருந்து வருகிறேன். 10 ஆண்டுகள் போடப்பட்டுள்ளது என கூறி ஒரு ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து அப்படி ஒரு ஒப்பந்தமே போடப்படவில்லை என வீட்டின் உரிமையாளர் மறுத்தார். இதையடுத்து ககன் போத்ரா கொடுத்த ஆவணம் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது. அதில் ககன் போத்ரா சமர்ப்பித்தது போலி ஆவணம் என தெரியவந்தது. இதையடுத்து ககன் போத்ராவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications