Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷூட்டிங்கில் "எம்ஜிஆர்" பட்ட பாடு இருக்கே.. குறுக்கே "கருணாநிதி".. சாதித்த "உலகம் சுற்றும் வாலிபன்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகத்திலேயே ஒரு திரைப்படம் இவ்வளவு பெரிய சோதனைகளையும் சாதனைகளையும் சந்தித்தது என்றால் அது "உலகம் சுற்றும் வாலிபன்" மட்டும்தான்.. இந்த படத்திற்கு முதலில் "உலகம் சுற்றும் தமிழன்" என பெயர் வைத்தார்கள். ஆனால் அதிலும் திமுக தரப்பில் ஏதாவது அரசியல் ஆக்குவார்கள் என யோசித்து"உலகம் சுற்றும் வாலிபன்" என டைட்டில் மாற்றினார்கள் என்று நம்மிடம் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் இதயக்கனி விஜயன்.

இதயக்கனி விஜயன்: சரித்திரம் படைத்த 'உலகம் சுற்றும் வாலிபன்' பொன்விழா ஆண்டு கண்டுள்ளது.. இந்த படம் உருவான விதம் குறித்தும், இந்த படத்தின்போது ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டைகள், சிக்கல்கள், சவால்கள், இவைகளை எல்லாம் வென்று, எம்ஜிஆர் இந்த படத்தை வெளியிட்ட விதம் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் 'இதயக்கனி' விஜயன், நம்மிடம் விலாவரியாக பகிர்ந்து கொண்ட தகவல்தான் இவை:
"உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்த ஆண்டு 1973 மே மாதம் 11 ஆம் தேதி.. மே 21ல் திண்டுக்கல் இடைத்தேர்தல். "உலகம் சுற்றும் வாலிபன்" படம் முடிவடைந்த நிலையில், ரெடியாக இருந்தது. திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு பிறகு ரிலீஸ் பண்ணலாம் என்று புரட்சி நடிகர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திட்டம் போடுகிறார். அதை ஆர்.எம்.வீ அவர்களிடம் வெளிப்படுத்துகிறார்.

ஆர்.எம்.வீ. அவர்கள், "படத்தை நாம் ஏன் தள்ளிப் போட வேண்டும்? முன்னதாக வெளிவந்தால் திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு அது ஒரு ஆதரவாகவும், இதனுடைய வெற்றி திண்டுக்கல் தேர்தலுக்கு ஒரு பக்கபலமாகவும் இருக்கும்.

MGRs fighting spirit and Do you know how the movie Ulagam Sutrum Valiban was released, explains Idhayakkani Vijayan

திமுக ஆட்சி: அது மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் தடுமாறிக் கொண்டிருக்கும் நமக்கு இந்த படம் வெளிவருமானால் அது இன்னொரு வகையில் பலமாக இருக்கும். பொருளாதார ரீதியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி ஒரு பக்கபலமாக இருக்கும். மேலும் நம்மிடம் இருந்து விட்டுப்போன தொடர்புகள், முடங்கி இருக்கிற நமக்கு வர வேண்டிய பணம் எல்லாமே வந்து சேரும். அதனால் படத்தை முன்னதாக வெளியிடலாம்" என யோசனை சொன்னார்.

அவர் சொன்னபடியே, நடந்ததால் தான், திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு முன்னதாகவே "உலகம் சுற்றும் வாலிபன்" வெளிவந்தது. இப்படி ஒரு தொடக்க சூழ்நிலையில் பிரச்சனையோடு தான் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் வெளிவந்தது. படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

மின்வெட்டு திட்டம்: இப்படி ஒரு வெற்றி தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் எந்த படமும் கண்டதில்லை. இந்த படம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக படம் வெளியாகும்போது, ஏற்கனவே இருந்த மின்வெட்டு திட்டமிடப்பட்டு அதிகப்படுத்தப்பட்டது... எந்தெந்த ஊர்களில் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் ரிலீஸ் ஆகிறதோ அங்கு மட்டும் அன்றைய ஆளும் கட்சி, திட்டமிட்டு பிரச்சனையை உண்டாக்கியது. ஆனாலும் இதையெல்லாம் எம்ஜிஆர் கண்டுகொள்ளவில்லை. இது போன்ற எத்தனையோ பிரச்சனைகளை கடந்து வந்த மன தைரியத்தில் இதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

ஜெனரேட்டரே பார்க்காத திரையரங்குகள் முதன்முதலாக இப்படத்தின் மூலம் ஜெனரேட்டரை பார்த்தது எனலாம். ஜெனரேட்டர் இல்லாமல் கூட சில ஊர்களில் படம் திரையிடப்பட்டது. அதாவது அந்த கோடை கால வெயிலில் மின்வெட்டு இருக்கும் சூழ்நிலையிலும் ரசிகர்கள் புழுக்கத்தோடும், வேர்வையோடும் இந்த படத்தை ரசித்துப் பார்த்தனர். இப்படி ஒரு அனுபவம் வேறு எந்த படத்துக்கும், வேறு எந்த ரசிகனுக்கும் ஏற்பட்டு இருக்காது என சொல்லலாம். எனக்கு கூட விருதுநகர் தியேட்டரில் அப்படி ஒரு அனுபவம் கிடைத்தது. அப்படி ஒரு உற்சாகம், ஆர்ப்பாட்டமான தொடக்கம். இப்படி பல விஷயங்களை சொல்லலாம்.

ரிக்‌ஷாக்கள்: ஊர் ஊராக போஸ்டர் ஒட்டுவதற்கு கூட திமுக அரசு தடையாக இருந்தது. வழக்கம் போல போஸ்டர் ஒட்டப்பட்டால் அதை திமுகவினர் கிழிச்சிடுவாங்கிறதை முன்கூட்டியே அறிந்த எம்ஜிஆர் ஸ்டிக்கர் மூலம் படத்தை விளம்பரம் செய்தார். கடைகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் என எங்கெல்லாம் தனது ரசிகர்கள் பார்ப்பார்களோ அங்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. திரு.பாண்டு அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து அதில் நிறைய வருமானமும் ஈட்டினார். இது ஒரு புதுமையான அனுபவம். பல இடங்களில் படத்தை திரையிடக்கூடாது என சோதனைக்கு உள்ளானது.

அண்ணா சாலையில் தியேட்டர்கள் கிடைக்க கஷ்டமாக இருந்த நிலையில், சிவாஜி கணேசன் எம்ஜிஆரை தொடர்பு கொண்டு, "அண்ணா! நான் இருக்கிறேன். எனது சாந்தி தியேட்டரில் படத்தை வெளியிடுங்கள்" என்றார். மகிழ்ச்சியுடன் வரவேற்ற எம்ஜிஆர் "உங்களது அன்புக்கு மிக்க நன்றி தம்பி, உங்கள் அக்கறை புரிகிறது. நான் முயற்சி பண்றேன். ஒருவேளை தியேட்டர் கிடைப்பது சிரமமானால் உங்களது தியேட்டரில் திரையிட உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்" என்றார்.

சிவாஜி தியேட்டரில் எம்ஜிஆர் படம் வெளி வந்தால் அதையும் ஒரு அரசியல் ஆக்கிவிடுவார்கள் என எம்ஜிஆர் தயங்கினார். முதலில் எல்லா ஊர்களிலும் திரையிடுவதற்கு உரிமையாளர்கள் பயந்து தயங்கினர். ஆனால் வருவது வரட்டுமே என படத்தை திரையிடுவோம் என தெரிவித்தனர்.

தேவி தியேட்டர்: அப்படித்தான் 'தேவி' திரையரங்கு குழுமத்தினர் தைரியமாக தங்களது தேவிபாரடைஸ், அகஸ்தியர, உமா ஆகிய அரங்குகளில் திரையிட்டனர். இப்படி எல்லாம் போராட்டத்திற்கு மத்தியில் வெளிவந்த படம் தான் "உலகம் சுற்றும் வாலிபன்". ஒரு பக்கம் திமுக அரசு இப்படி தொந்தரவு செய்தாலும் , படம் வெளியான 50 நாட்களில் 60 லட்ச ரூபாய் அரசுக்கு வருமானத்தை கொடுத்தது. இது இன்றைக்கும் பெரிய தொகை தான். அன்றைய காலகட்டத்திற்கும் இது பெரிய தொகை தான். அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. திரையரங்குகளில் அப்படி ஒரு வரவேற்பை இப்படம் பெற்றது.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரை வைத்து படம் தயாரிக்க முன்வந்த பல தயாரிப்பாளர்கள் திமுக அரசால் பின்வாங்கினர்.. அதனால் இரண்டு மூன்று வருடங்கள் எம்ஜிஆர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இந்த மாதிரியான பிரச்சினையையும் எம்ஜிஆர் சந்தித்தார். உலகம் சுற்றும் வாலிபன் படம் வெற்றி பெற்ற பிறகு தான் உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் என வரிசையாக படம் வெளியானது.

பெயர் மாற்றம்: உலகத்திலேயே ஒரு திரைப்படம் இவ்வளவு பெரிய சோதனைகளையும் சாதனைகளையும் சந்தித்தது என்றால் அது "உலகம் சுற்றும் வாலிபன்" மட்டுமே. இப்படத்திற்கு முதலில் "உலகம் சுற்றும் தமிழன்" என பெயர் வைத்தார்கள். ஆனால் அதிலும் ஏதாவது அரசியல் ஆக்குவார்கள் என யோசித்து "உலகம் சுற்றும் வாலிபன்" என டைட்டில் மாற்றினார்கள்.
1970 இல் மார்ச்சில் ஜப்பான் ஓசாகா நகரத்தில் எக்ஸ்போ 70 கண்காட்சி, உலகமே வியக்கும் வண்ணம் நடப்பதை அறிந்து, இக்கண்காட்சியை படத்தில் காட்டினால் எப்படி இருக்கும் என எம்.ஜி.ஆர் திட்டம் போட்டார். திட்டமிட்டதன் பலன் "இதயம் பேசுறது" மணியன் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வைத்தார்.

MGRs fighting spirit and Do you know how the movie Ulagam Sutrum Valiban was released, explains Idhayakkani Vijayan

எங்கள் தங்கம்: இந்த பரபரப்பில் "எங்கள் தங்கம்" படம் படப்பிடிப்பு நடந்த போது கூட முதல்வர் திரு. கருணாநிதி நேரடியாக தலையிட்டு, "தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போல" என்கிற பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது, அவரும் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் இரண்டு நாட்கள் காத்திருந்து அந்த பாடலின் காட்சியை படமாக்கினார்கள். ஏனென்றால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகவேண்டும். இன்னொன்று எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு முடித்துவிட்டு ஓரிரு தினங்களில் ஜப்பான் கிளம்புவதாக இருந்தது. அதற்காக அவர் அங்கு சென்று விட்டால், வர இரண்டு மாதங்கள் ஆகும். அதுவரை படம் வெளியிடுவது பிரச்சினையாகும் என்று நினைத்த முதல்வர் கருணாநிதி கூடவே இருந்தார்.

ஆனால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தங்களது பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்கள் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் நடிப்பதற்கு ஜெயலலிதா முடிவு சொல்லாததால் தான், சந்திரகலாவை தயார் செய்து விட்டார். கடைசி நேரத்தில் தான் இவ்வளவு பரபரப்பும். எல்லோருக்கும் யூனிஃபார்ம், எல்லோருக்கும் விமான பயணத்திற்கான ஏற்பாடு தயாரானது. படத்தின் பாடல் பதிவு துரிதமாக நடக்க ஏற்பாடு செய்தனர்.

ராமன் தேடிய சீதை: எம்ஜிஆருக்கு தன்னுடைய உடைகளை தயார் செய்ய நேரம் இல்லாத காரணத்தால், "ராமன் தேடிய சீதை" படம் படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில், அதற்கான உடைகள் தயாராகிவிட்டது என்பதை அறிந்த எம்ஜிஆர், அந்த படத்தின் தயாரிப்பாளர் திரு.கனகசபை செட்டியாரிடம் எம்ஜிஆர் "முதலாளி நீங்க இந்த உடைகளையும், விக்கையும் படத்துக்கு தந்து உதவுங்கள், என்னுடைய "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்பு முடிச்சிட்டு வந்து தருகிறேன். அதற்கு என்ன பணம் தேவையோ அதை தந்து விடுகிறேன்" என்று எம்ஜிஆர் சொன்னதும், "அதெல்லாம் வேண்டாம். நீங்க நல்லபடியா ஷூட்டிங் முடிச்சிட்டு வாங்க. உங்க படத்துக்கு எங்கள் உடைகள் பயன்படுவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி" என்றார்.

உடனே எம்ஜிஆரின் நேர பற்றாக்குறை தீர்ந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் அந்த அளவு நேர பிரச்சனை இருந்தது. குறுகிய கால அவகாசத்தில் எம்ஜிஆர் சாதுரியமாக, சாமர்த்தியமாக அதை கையாண்டார். அதாவது ஒரு தயாரிப்பாளர், ஒரு இயக்குனர், ஒரு நடிகர் ஒரு படத்திற்கு எவ்வளவு மெனக்கிட முடியுமோ அதைவிட பல மடங்கு எம்ஜிஆர் செய்தார். உலகில் இது போன்று இன்னொரு படத்தை, இன்னொரு நடிகரை ஒப்பிட்டு சொல்ல முடியாத அளவு எம்ஜிஆரின் சாதனையை சொல்லலாம்.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பிரிவ்யு ஷோ என போட்டு காட்டுவார்கள். அதை பார்த்து அனைவரும் பாராட்டினார்கள். திரையரங்கிற்கு சென்றும் பார்ப்பதற்கு ரெடியாக இருந்தனர். அப்படி படம் பார்த்தவர்களில் இயக்குனர் ஏ.பி. நாகராஜனும் ஒருவர். அவர் படத்தை பார்த்துவிட்டு, வீட்டிற்கு சென்று தன் இரண்டு பிள்ளைகளிடமும் படத்தை பாராட்டி சொன்னார். வீட்டில் அவரது இரண்டு மகன்களும் எம்ஜிஆரின் அன்புக்குரிய ரசிகர்கள்.

சிவாஜி கணேசன்: தந்தை ஏ.பி நாகராஜன் சிவாஜியை வைத்து தொடர்ந்து படம் எடுத்தவர். அவரே இந்த படத்தை இப்படி மெய் சிலிர்த்து சொல்கிறாரே, நாமும் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் பார்க்கணும் என தந்தையிடம் தொந்தரவு செய்ய, அவரும் எம்ஜிஆருக்கு போன் செய்கிறார்.

"நீங்கள் பிஸியாக இருப்பீங்க, படம் நாளை ரிலீஸ் ஆகிறது", என தயங்கியவாறே, தனது மகன்களின் ஆசையை சொல்ல, எம்ஜிஆர் "இன்னும் ஒரு மணி நேரத்தில் பதில் சொல்கிறேன்" என சொல்லிவிட்டு ஒரு மணி நேரத்தில் ஏ.பி. நாகராஜனை தொடர்பு கொள்கிறார். "பல்லாவரம் லட்சுமி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகிறது. அதை திரையிட பிரிண்ட் அனுப்பப் போகிறோம். அந்த பிரிண்டை முன்னதாக உங்களது ஏ.பி.என் தியேட்டருக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்கள் உங்கள் மகன்களுக்கு படத்தைக் காட்டி விட்டு நீங்களே பல்லாவரம் லட்சுமி தியேட்டருக்கு அனுப்பி விடுங்கள்" என சொன்னார்.

MGRs fighting spirit and Do you know how the movie Ulagam Sutrum Valiban was released, explains Idhayakkani Vijayan

ரிலீஸ் தேதி: ஏ. பி. நாகராஜன் இதை எதிர்பார்க்கவே இல்லை. 'உடனே முடிவெடுத்து இப்படி ஒரு செயலை செய்கிறாரே. அதுதான் எம்ஜிஆர்' என நினைத்து பெருமை கொண்டார். லட்சுமி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும் போது பயங்கரமாய் மிரட்டல் வேறு , தியேட்டர் உரிமையாளரும் திமுக பிரமுகர்தான். ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை தனது தியேட்டரில் ரிலீஸ் பண்ண அவருக்கு எந்த தயக்கமும் கிடையாது. அதன்படி ஏ.பி. நாகராஜன் அனுப்பி வைத்த படப்பெட்டியை வைத்து படத்தை வெளியிட்டார்.

"உலகம் சுற்றும் வாலிபன்' வெளிவராது. வெளிவந்தால் சேலை கட்டிக்கொள்கிறேன்" என்று மதுரை முத்து சவால் விட்டார். படம் வெளிவந்தபோது முத்துவுக்கு தமிழகமெங்கிருந்தும் ரசிகர்கள் சேலைகளை அனுப்பி வைத்தனர்.

மஞ்சுளா - லதா: "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, மேட்டா ரூங்ரட்டா, அதாவது தாய்லாந்து நடிகை, இவர்கள் கதாநாயகிகளாக நடித்தார்கள். அது அல்லாமல் படத்தில் ஆர் எஸ் மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன், வி. கோபாலகிருஷ்ணன், நம்பியார் இவர்களும் உண்டு. இவர்கள் காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கப்பட்டது. வெளிநாட்டில் எடுக்கப்பட்டது போலவே அது இருந்தது. "உலகம் சுற்றும் வாலிபன்" ஜப்பான், அங்கு எக்ஸ்போ கண்காட்சி, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் ஆகிய கிழக்காசிய நாடுகளில் படமாக்கப்பட்டது.

இதில் ஜப்பானில் படமாக்கப்பட்ட போது எம்ஜிஆர் ஒருவரே அனைத்து இடங்களையும் தேர்வு செய்து, படப்பிடிப்பை நடத்தினார்.. இரவு பகல் பாராமல். இரவெல்லாம் லொகேஷன் தேடிச்சென்று அதை போட்டோ எடுத்து விட்டு மறுநாள் படப்பிடிப்பு நடத்தலாமா என நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து, அதற்கேற்றபடி திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தினார். தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்திற்கும் சூத்திரதாரி அவர்தான். ஆனால் டைட்டிலில் டைரக்ஷன் எம்ஜிஆர் மட்டும் இருக்கும். இது அவருடைய எளிமை, பெருந்தன்மை.

இவரா ஹீரோ?: கதை ஆலோசனையில் பெரும்பங்கு வகித்தவர் ஆர்.எம் வீ அவர்கள். அவரும் எம்ஜிஆர் குழுவோடு வெளிநாடுகளுக்கு சென்றார். ஏனென்றால் பொருளாதார விஷயங்களை அவர்தான் கவனித்தார். தேவையான செலவு மட்டும் அவர் பொறுப்பு. எம்ஜிஆர் தாராளமாக செய்பவர். ஆனால் அதற்கும் அளவுகோல் எம்ஜிஆருக்கு உண்டு.

படத்தில் நான்காவது கதாநாயகியான மேட்டா ரூங்ராட், எம்ஜிஆரை முதலில் பார்த்தபோது, அவரது எளிமையை பார்த்து "இவரா நாயகன்?" என கேள்வி கேட்டார். மறுநாள் படப்பிடிப்பில் அவரை பார்த்து "இப்போது எண் முன்னே இருப்பது நேற்று பார்த்தவரா ?" என ஆச்சரியப்பட்டார். அந்த மேட்டாவுக்கு இப்போது சரியாக 80 வயது இருக்கும். அவருடைய முகநூலில் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் இருந்த புகைப்படத்தை வைத்துள்ளார். அது 'இதயக்கனி' பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது.

சவால்கள்: படத்தில் எம்ஜிஆர் இயக்குனராக இருந்தாலும், அவருக்கு உறுதுணையாக ப.நீலகண்டன் சென்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர் வி. ராமமூர்த்தி, அவருக்கு துணையாக ஏ.வி. ராமகிருஷ்ணன், இன்னொரு ஒளிப்பதிவாளர் ஹரி, அவர் "பட்டிக்காட்டு பொன்னையா" இயக்கிய பி.எஸ். ரங்காவின் தம்பி ஆவார். இரண்டு ஒளிப்பதிவு கருவிகள், கேமரா அயல்நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

200 நாட்களை கடந்து படத்தின் வசூலும், வெற்றியும் அபாரமாக இருந்தும், எம்ஜிஆருக்கு லாபம் குறைவே. காரணம் படம் விற்ற தொகையை தாண்டி செலவு அதிகமாகிவிட்டது. ஆனால் மறு வெளியீடுகளில் அதற்கு கிடைத்த வசூலும், வரவேற்பும் எம்ஜிஆருக்கு புதுப்புது ரசிகர்களை உற்பத்தி செய்து வருகின்றது. லாபமும் தான்" என்றார் இதயக்கனி எஸ். விஜயன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+