குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம்.. காஞ்சியில் களமிறங்கிய ஸ்டாலின்!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று முதல் நாளில் இருந்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த விஷயத்தில் அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தற்போது தீவிரமாக போராட்டம் செய்ய தொடங்கி விட்டது.
மிக முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சட்டம் எப்படி
இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள், அவர்களின் குடியுரிமை மறுக்கப்படும் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நாடு முழுக்க பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார். இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்துகிறது.
உதயநிதி ஸ்டாலின்
ஏற்கனவே சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். குடியுரிமை சட்ட நகலை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையில் பெரிய போராட்டம் நடத்தி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.
யார் எம்பிக்கள்
திமுகவின் முக்கிய எம்பிக்கள் ஆ.ராசா , கனிமொழி, தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் சென்னையிலும் திருச்சியிலும் போராட்டம் செய்து வருகிறார்கள். மாநிலம் முழுக்க இருக்கும் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தலைமையிலும், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தலைமையிலும் போராட்டம் நடந்து வருகிறது.
மாபெரும் கோஷம்
இதில் அதிமுக கட்சிக்கு எதிராக மாபெரும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவும் தீவிரமாக கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் பாதுகாப்பு கருதி அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.