அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த டிரைவர்கள்..விபத்து அதிகரிக்கும்.. தொழிற்சங்கங்கள் கண்டனம்
பணியாளர் பற்றாக்குறையை போக்க நியமன நடவடிக்கையை நிர்வாகம் விரைந்து தொடங்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: தனியார் நிறுவனம் மூலம் தேர்வான ஒப்பந்த ஓட்டுநர்கள் பிப்ரவரி 15 தேதி முதல் பணியை தொடங்க உள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பணிமனை ஓட்டுநர் பணியை அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களாலேயே மேற்கொள்ள முடியும். சமீபத்தில் குன்றத்தூர், அம்பத்தூர் பணிமனைகளில் பேருந்தை இயக்கியபோது விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை சமாளிக்க பணிமனைக்குள் பேருந்துகளை நிறுத்துதல், டீசல் நிரப்புதல் போன்ற பணிகளில் ஈடுபடும் பணிமனை ஓட்டுநர்களிடம், வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கும் பணியை வழங்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டிருந்தது.
அத்துடன் பணிமனைக்குள் பேருந்துகளை இயக்கும் பணியை ஒப்பந்த நிறுவனங்களின் ஓட்டுநர்கள் மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த பணியை மேற்கொள்ள ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நிறுவனம் மூலம் தேர்வான ஓட்டுநர்கள் வரும் 15ஆம் தேதி முதல் பணியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.

மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் தலைவர் ராஜூ, போக்குவரத்து துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனங்கள் செய்யப்படும் என்று தெரிவித்த திமுக அரசு,பணி நியமனம் செய்யாமல், இருக்கும் தொழிலாளர்களை வைத்தும்,ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமித்தும் துறையை நடத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

இதேபோல், பணிமனை ஓட்டுநர் பணியை அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களாலேயே மேற்கொள்ள முடியும் என்று அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (CITU) தெரிவித்திருக்கிறது. அனுபவம் இல்லாதவர்கள் ஓட்டி, சமீபத்தில் குன்றத்தூர், அம்பத்தூர் பணிமனைகளில் பேருந்தை இயக்கியபோது பெரும் விபத்தும் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த பணியிடங்களில் மூத்த ஓட்டுநர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். பணியாளர் பற்றாக்குறையை போக்க நியமன நடவடிக்கையை நிர்வாகம் விரைந்து தொடங்க வேண்டும் என்றும், ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதை சிஐடியு கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications