கருணாநிதி செய்தது நினைவிருக்கா? ஆனா ஸ்டாலின் இப்படி செய்யலாமா? 12 மணி நேரம் வேலை மசோதா பற்றி சிஐடியு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 8 மணி நேரத்திற்கு பதில் 12 மணி நேரம் வேலையை உறுதி செய்யும் விதமாக இன்று சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சிஐடியு தொழிற்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் சிஐடியு பட்டியலிட்டுள்ளது.
தொழிற்சாலைகள் பெருக தொடங்கிய காலத்தில் மனித உழைப்பு அபரிமிதமாக சுரண்டலுக்கு உள்ளானது. ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 18-20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் பிழிந்தெடுக்கப்பட்டனர். இதற்கு எதிராக கொதிப்படைந்த மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். ஏராளமான உயிர் தியாகங்களுக்கு பின்னர் வேலை நேரம் என்பது 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உழைப்பு என்பதுதான் தொழிற்சங்கங்களின் முழக்கமாக இருக்கிறது.

இந்தியாவிலும் இந்த சட்டம் பின்பற்றப்பட்டாலும், 9-10 மணி நேரம் வரை ஏறத்தாழ அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களும் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே இந்த வேலை நேரத்தை 8லிருந்து 7 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று தொழிற்சங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த வேலை நேரம் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், ஏன் இதனை மாற்றுகிறார்கள்? என்று சிஐடியு மாநில தலைவர் எல்.சௌந்தரராஜன் Oneindia Tamilக்கு பிரத்தேயகமாக பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "இந்த சட்டம் அரசு நிறைவேற்றியதற்கு காரணம் பெரும் முதலாளிகளின் நிர்பந்தம்தான். ஏற்கெனவே இதுபோன்ற ஒரு மசோதா மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. ஆனால் பாஜக அரசு கொண்டு வருவதற்கு முன்னரே திமுக அரசு ஏன் கொண்டுவர வேண்டும்? இது எந்த விதத்திலும் நியாமம் கிடையாது. தற்போதைய நிலவரப்படி ஒரு நாளைக்கு 8 மணி நேரம்தான் வேலை. கூடுதலாக வேண்டுமானால் 1 மணி நேரம் வேலை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும். அது மட்டுமல்லாது அடுத்த நாள் வேலை நேரத்தை 7 மணி நேரமாக குறைக்க வேண்டும். அதாவது வாரத்திற்கு 48 மணி நேரம்தான் வேலை இருக்க வேண்டும்.
இந்த சட்டத்தை தற்போது தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் நீர்த்துப்போக செய்துவிடும். ஏற்கெனவே வேலையில்லா திண்டாட்டம் அதிமாக இருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற சட்ட திருத்தங்கள் வேலை வாய்ப்பை மேலும் குறைத்து வேலையில்லா திண்டாட்டத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும். எனவே இந்த சட்ட திருத்தம் மிகப்பெரிய சமூக பிரச்னையை ஏற்படுத்தும். இதில் முரண்பாடு என்னவெனில் மு.கருணாநிதி வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று அவரது காலத்தில் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவரது மகன் மு.க.ஸ்டாலின் தற்போது வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் கடந்த கால பேச்சுகளுக்கும், எழுத்துகளுக்கும் சம்பந்தம் இல்லாததை போல தற்போது அவருடைய செயல்பாடுகள் இருக்கிறது. இதனை எதிர்த்து சிஐடியு போராட்டத்தில் ஈடுபடும். ஏற்கெனவே ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்கிற கோரிக்கையை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கங்கள் மட்டுமல்லது திமுகவின் தொமுச-வும் கூட போராட்டத்தில் இறங்கியுள்ளன. எனவே இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும். ஏனெனில் 12 மணி நேரம் வேலை என்பது மனித வாழ்நாளையே குறைத்துவிடும். ஆகே அரசு இதனை வாபஸ் பெறாவிட்டால் சிஐடியு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications