காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் முன்பே திமுக நிர்வாகிகள் இடையே கைகலப்பாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் கடந்த முறையை போல இந்த முறையும் காங்கிரசுக்கு ஒதுக்கக் கோரி ஒரு தரப்பும், இந்த முறை திமுகவிற்கு ஒதுக்க கோரி ஒரு தரப்பும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது.
கடந்த முறை கிள்ளியூர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

திமுக வேட்பாளர் நேர்காணல்
திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நேற்று முதல் நடந்து வருகிறது. திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கள நிலவரம் என்ன, யார் போட்டியிடலாம், யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்பது குறித்து நேரடியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி இன்று வேட்பாளர்கள் நேர்காணல் நடந்தது.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்றுவிட்டு அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்ததும் திமுக நிர்வாகிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பும் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உண்டானது.
கைகலப்பாக மாறியதால் பரபரப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை காங்கிரசிடம் இருந்து திமுகவினர் பெற்றுவிட வேண்டும் என நேர்காணலின் போது முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு தரப்பு திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், இன்னொரு தரப்பினர் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை போட்டியிட எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை நாங்கள் அவரை வெற்றிபெற வைக்கவும் உழைப்போம் என்றும் மற்றொரு தரப்பு திமுக நிர்வாகிகள் சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தான் நேர்காணல் முடிந்து வெளியே வந்ததும், இரு தரப்பு திமுக நிர்வாகிகள் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பாக மாறியதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications