தவெக கொடி கட்டிய கார்.. “ஆள் தெரியாம எங்ககிட்டயே காசு கேக்குறியா?” டோல்கேட்டில் ஊழியர்களிடம் தகராறு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தவெக கட்சி தொண்டர்கள், சுங்கச்சாவடியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரியமங்கலம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வி.சாலையில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் மாநாட்டுத் திடலும், சுமாா் 207 ஏக்கா் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

தவெக முதல் மாநாடு: கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் தீவிரமாக கண்காணித்து வருகிறார். தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதாகத் தெரிகிறது. மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தவெக மாநாட்டு பந்தல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும், தமிழக வெற்றி கழக மாநாடு குறித்து விளம்பரப்படுத்த காவல் துறையினர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் விக்கிரவாண்டி பகுதியில் விளம்பர பேனர்கள் அமைத்தும், ஹீலியம் கேஸ் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்கவிட்டும் வருகின்றனர்.
மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம்: தவெக மாநாடு நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் ஆகியோரின் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக சீருடை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக நிர்வாகிகள் மோதல்: இந்நிலையில், தவெக நிர்வாகிகள், சுங்கச்சாவடியில் மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் சுங்கச்சாவடியில், தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகள், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
சுங்கச்சாவடியில் தகராறு: தவெக கொடி பொருத்தப்பட்ட காரில் ஃபாஸ்டேக் இல்லாத நிலையில், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதாகவும், டோல்கேட் ஊழியர்கள் காரை மறித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி மாநாட்டு பணிகளை பார்வையிட்டுவிட்டு வரும் எங்களிடம் டோல்கேட் கட்டணம் கேட்கிறாயா என தவெக நிர்வாகி ஒருவர் ஊழியர்களிடம் ஆவேசமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.
தவெக நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அங்கு ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டு, சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டியதாகவும், ரோடே சரியில்லை, எதற்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications