திமுக - தவெகவினர் இடையே திடீர் மோதல்.. சென்னை அயோத்தி குப்பத்தில் பரபரப்பு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை அயோத்தி குப்பத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான முகாமில் மேஜை போடுவது தொடர்பாக திமுக மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதல் உருவானதால் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட வாரியாக இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதோடு 2025 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனப்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இதுதவிர 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 09.11.2023, 10.11.2024, 23.11.2024 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்தது.
கடைசி நாளான இன்றும் மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. அதன்படி சென்னை அயோத்தி குப்பத்தில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று சிறப்பு முகாம் தொடங்கியது. இந்த சிறப்பு முகாமை தொடர்ந்து பள்ளியின் எதிரே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் மேஜை அமைத்து பணிகளை தொடங்கினர். இதற்கு திமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதாவது தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்சி கொடியுடன் அமைத்து இருந்த மேஜைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு மேஜையை அங்கிருந்து அகற்றும்படி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியுள்ளது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தள்ளியுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் சென்னை மெரினா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அப்போதும் இருதரப்பினரும் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் போலீசார் இருதரப்பினரையும் பேசி சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அயோத்தி குப்பம் லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications