கோயம்பேடு மாநகர பஸ்ஸில் டிரைவர் - கண்டக்டரிடையே தாறுமாறாக சண்டை.. வேகமாக பரவும் வீடியோ
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் மாநகர பேருந்திற்குள் டிரைவர்கள்- கண்டக்டர் பயங்கரமாக மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
சென்னை கொரட்டூரில் இருந்து தாம்பரம் நோக்கி ரூட் நம்பர் 70 என்கிற மாநகர பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. பேருந்தை டிரைவர் சிவானந்தம் என்பவர் ஓட்டினார். அந்த பேருந்து கோயம்பேடு நிலையத்துக்குள் வந்து பயணிகள் இறங்கினார்கள். முன்னால் நின்ற மற்றொரு மாநகர பஸ்சை எடுத்து வழிவிடுமாறு டிரைவர் சிவானந்தம் கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த மாநகர பேருந்தின் டிரைவர் புண்ணியமூர்த்தி, பேருந்தை எடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. உடனே சிவானந்தம், எதுவாக இருந்தாலும் பேருந்துக்குள் வந்து பேசும்படி கூறியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் புண்ணியமூர்த்தி, அந்த பஸ்சின் கண்டக்டர் பாலகுமார் இருவரும் பஸ்சுக்குள் ஏறியவுடன் சிவானந்தம் பஸ்சின் தானியங்கி கதவை மூடிவிட்டு அங்கிருந்து பஸ்சை எடுத்தார். அதிர்ச்சிஅடைந்த புண்ணியமூர்த்தி, பாலகுமார் இருவரும் பஸ்சை நிறுத்தும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் சிவானந்தம் கேட்காமல் தொடர்ந்து பஸ்சை இயக்கி உள்ளார். இதனால் டிரைவர்கள் இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. மேலும் புண்ணியமூர்த்தி பஸ்சில் இருந்த கியர் ராடை பிடித்து இழுத்து பஸ்சை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் சிவானந்தம் விடாப்பிடியாக பஸ்சை நிறுத்த மறுத்தார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த டிரைவர் புண்ணியமூர்த்தி மற்றும் கண்டக்டர் பாலகுமார் இருவரும் சேர்ந்து டிரைவர் சிவானந்தத்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.. கண்டக்டர் பாலகுமார், பஸ்சின் கம்பியை பிடித்து தொங்கியபடி சிவானந்தத்தை காலால் எட்டி உதைத்திருக்கிறார்.
பஸ்சுக்குள் பயணிகள் கண் முன்பே மாநகர பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் ஆகியோர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவத்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சில நிமிட சண்டைக்கு பின்னர் பஸ்சின் தானியங்கி கதவை திறந்து டிரைவர் புண்ணியமூர்த்தி, கண்டக்டர் பாலகுமார் இருவரும் கீழே இறங்கி சென்றுவிட்டார்கள்..
தனது பஸ் டிரைவரை மற்றொரு பஸ்சின் டிரைவர், கண்டக்டர் சேர்ந்து தாக்குவதை அந்த பஸ்சின் கண்டக்டர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. துறை ரீதியான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications