தல - தளபதி ரசிகர்களுக்கு இடையே மோதல்... கத்திக் குத்தில் ஒருவர் கவலைக்கிடம்... சென்னையில் பரபர
சென்னை: சென்னை புழல் அகதிகள் முகாமில், நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவரைக் கத்தியால் சரமாரியாக குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பட அறிவிப்புகள், ட்ரெய்லர் வெளியீடு என ஒவ்வொரு சிறு நகர்வையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி மகிழும் ரசிகர்கள், பல நேரங்களில் ட்விட்டரில் மோதிக் கொள்ளுவதும் வழக்கமாகி விட்டது.

அஜித்தின் நேர்கொண்டபார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் #ஆகஸ்ட் 8 பாடை கட்டு என்ற ஹேஷ்டேக்கை எதிர்தரப்பினர் ட்ரெண்ட் செய்ய, பதிலுக்கு #RIPactorVIJAY என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் மோதுவது பத்தாது என்று, நேரில் மோதிக் கொண்டு இருப்பது பலரையும் வருத்தமடைய செய்துள்ளது.
சென்னை புழல் அகதிகள் முகாமில் வசிக்கும், அஜித் ரசிகர் எனக் கூறப்படும் உமாசங்கர் (32) என்பவர், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் ரசிகர் எனக் கூறப்படும் ரோஷன் (34) என்பவரிடம் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, நடந்த விவாதத்தில் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரோஷன், வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து, உமா சங்கரின் தலை, தோள்பட்டை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக் கொண்டு சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உமாசங்கரை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், ரோஷனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஷன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications