காலநிலை மாற்றத்தால் சரியும் உணவு பொருள் உற்பத்தி! நெருக்கடியில் இந்தியா.. எச்சரித்த ஆய்வாளர்கள்
சென்னை: பருவமழை பொய்த்துப்போனது, தக்காளி விளைச்சல் பாதிப்பு, வெங்காய விளைச்சலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு இவையெல்லாம் சேர்ந்து நாடு முழுவதும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக உலகம் வித்தியாசமான வானிலை மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பிரிட்டனில் ஏற்பட்ட வெப்ப அலை, ஐரோப்பிய நாடுகளை காலநிலை மாற்றம் குறித்து தீவிரமாக விவாதிக்க வைத்தது. பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கும் பிரிட்டன் இயல்பிலேயே ஒரு குளிர் பிரதேசம். ஆனால் உறைபனி இருக்காது. அதேபோல 32 டிகிரி செல்ஸிஸுக்கு மேல் வெப்பமும் இருக்காது. இப்படிப்பட்ட நாடு கடந்த ஆண்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

வழக்கத்திற்கு மாறான வெயில் காரணமாக காட்டுத் தீ பெரிய அளவில் பரவியது. உயிரியல் பூங்காக்களில் இருந்த மிருகங்கள் உடல்நிலை மோசமானது. மறுபுறம் மக்கள் வெயில் காரணமாக ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆசியாவிலும் கடந்த ஆண்டு காலநிலை மாற்றம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காலநிலை மாற்றத்தால் உருவானதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வரலாறு காணாத இந்த வெள்ளம் 1,700க்கும் அதிகமானவர்களை கொன்றது. பல்லாயிரக்கானோர் வீடுகளை இழந்து வெவ்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தனர். அதேபோல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இந்த வெள்ளம் பொருட் சேதங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான் திவால் நிலையை நோக்கி சென்றது. தற்போது இதன் தொடர்ச்சியாக காலநிலை மாற்றம் இந்தியாவையும் மெல்ல தாக்க தொடங்கியுள்ளது.
அதாவது, நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை குறைந்த அளவு மட்டுமே தலைகாட்டியது. இதன் காரணமாக இந்திய வரலாற்றில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆகஸ்ட்டில் வறட்சி ஏற்பட்டது. மழை குறைவு காரணமாக ஏற்கெனவே தக்காளி விலை விண்ணை முட்டிய நிலையில், தற்போது வெங்காயம் மற்றும் இதர உணவு பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. விலையுயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவிகிதம் வரை வரி விதித்திருக்கிறது.
அதேபோல அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நாடு முழுவதும் விலைவாசி அதிகரித்துள்ளது. இந்தியா தவிர சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் விலைவாசி அதிகரித்துள்ளது. காரணம் இந்த நாடுகளுக்கு இந்தியாவிலிருந்துதான் அரிசி ஏற்றுமதியாகிறது. மத்திய அரசு இதற்கு கட்டுப்பாடுகள் விதித்ததால் இந்த நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ளது. அதேபோல ஐநாவின் உலக உணவு திட்டத்தின் அதிகாரிகள், இந்த திட்டத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 200,000 டன் இந்திய அரிசியை உடனடியாக கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு இந்தியா என்ன பதில் சொல்லப்போகிறது என்பது தெரியவில்லை. அதேபோல அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எப்படி இருந்தாலும் இந்திய மக்கள் சிறிதளவு உணவு பொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்வார்கள் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications