"நாங்கள் ஏழைகள், அப்படித்தான் இருப்போம்".. செருப்புடன் தன்னை ஒப்பிட்ட ராசாவுக்கு முதல்வர் பதிலடி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டு பேசிய தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கூட்டம் ஒன்றில் பேசும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்த வகையில் ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டு பேசியதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். வெல்ல மண்டியில் வேலை பார்த்த எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் அணிந்துள்ள செருப்பின் விலையை விட மதிப்பு குறைவானவர் என்றும் அவர் ஸ்டாலினுக்கு போட்டியா என்றும் ராசா பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தஉள்ளது.
இதற்கு, மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராசாவின் பேச்சை குறிப்பிட்டு கூறுகையில், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலை அப்படித்தான். நானும் அப்படியே இருந்துவிட்டு போகிறேன். ஒரு லட்சத்து எழபத்து ஆறாயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் தி.மு.கவினர் என்று சாடினார் முதல்வர்.