சென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகத்தில் மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் மாநிலத்திற்குள்ளான ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஏற்கெனவே மீண்டும் தொடங்கிவிட்டது. அதேபோன்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. பொதுமக்களுக்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புறநகர் ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இந்த ரயில்களை மீண்டும் இயக்குவது, பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்கவும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆகையால் சென்னை, சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார ரயில்கள், புறநகர் ரயில்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் இயக்குவதற்கு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications