"500 சந்தேகங்கள்".. கர்நாடகா தேர்தல் படுதோல்வியை மறைக்கும் தந்திரம்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை மறைக்கவே இந்த ஒற்றைத் தந்திரம் என ரூ 2000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பணபுழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க புதிய ரூ 500, ரூ 2000, ரூ 200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

அது போல் 89 சதவீத ரூ 2000 நோட்டுகள் 2016 இல் புழக்கத்தில் விட்டதை அடுத்து 2018-2019 ஆம் ஆண்டு முதல் ரூ 2000 நோட்டுகள் அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்திவிட்டது.
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு பிரச்சினைகள் குறைந்ததாலும் இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இருப்பதாலும் ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறுகையில், எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 2016ல் நாங்கள் கூறியது சரி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு செய்த மிகப்பெரிய பிழையை சமாளிக்க, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது முட்டாள்தன நடவடிக்கை என்பது உறுதியானது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் சில வாரங்கள் கழித்து மத்திய அரசும், ரிச்ர்வ் வங்கியும் 500 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகப்படுத்தும் நிர்பந்தத்துக்கு உள்ளாகின. எனவே ரிசர்வ் வங்கி 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எங்கள் செல்ப் ஸ்டைல் விஸ்வகு எப்படி என்றால் முதல்ல எதையும் யோசிக்காம செஞ்சிடுவாரு.. அதன் பிறகுதான் அதை பற்றி யோசிப்பாரு.. என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றார். பாஜக 66 இடங்களிலும் மஜத 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் பாஜக வெல்வதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்பட்டு அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியை மறைக்கவே ரூ 2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications