ஸ்டாலினின் அடுத்த சிக்சர்.. அது என்ன “மதி”? இனி தமிழ்நாட்டில் எங்க போனாலும் இதை பார்க்கலாம்
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ள புதிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்து உள்ளது. அப்படி என்ன திட்டம்? விரிவாக பார்ப்போம்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அளவிலான மூன்றாவது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

அவர் பேசுகையில், "மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 2022-23-ஆம் ஆண்டில் நடைபெற்ற கண்காட்சிகளில் 3,528 சுய உதவிக் குழுக்கள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் 137 விற்பனை அங்காடி (Kiosk) அமைக்கப்பட்டு உதவிக் சுய குழு தயாரிப்புகளை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்படுவதுடன், முறையான பேக்கிங் மற்றும் தயாரிப்புகளை தரப்படுத்துவற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு மதி வணிக முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
2022-2023-ஆம் ஆண்டு சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்க 25 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதையும் தாண்டி 25 ஆயிரம் 642 கோடி ரூபாய், 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி, நமது அரசு சாதனை புரிந்துள்ளது என்பதை இங்கு பெருமிதத்துடன் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 45 ஆயிரம் கோடி ரூபாயினையும் தாண்டி 47 ஆயிரத்து 34 கோடி ரூபாய் வழங்கி சாதனை புரிந்துள்ளோம். 2023-2024-ஆம் ஆண்டு வங்கிக் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 30 ஆயிரம் கோடி ரூபாயில், 30.06.2023 வரை, சுய உதவிக் குழுக்களுக்கு 5,644 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.
2023-24 ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 'மதி சந்தை' என்ற இணையவழி விற்பனை தளம் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளாகவும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.

மகளிர் உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சுய காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் 'மதி அங்காடிகள் நிறுவப்படுவதுடன், சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 'மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்' வழங்கப்படவுள்ளன. மேலும் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் 'மதி திணை உணவகங்கள்', ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளன.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சுய உதவிக் குழு உறுப்பினர்களைப் பயிற்றுவித்து, அவர்களின் பங்கேற்பின் மூலம், தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications