முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. சென்னையில் அனைத்து அரசு அலுவலங்களுக்கும் இன்று விடுமுறை..!
அரசு ஊழியர்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
எந்த பக்கம் திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது சென்னை.. ஒரே நாள் பெய்த கனமழையில் தறிகெட்டு சாலைகளில் ஓடி கொண்டிருக்கிறது வெள்ள நீர்..!
மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது.. முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால், அவைகள் மூடப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் முழுக்க தண்ணீர் தேங்கி நிற்கின்றன.. இதனால் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது... வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்
சாலைகளில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்குவதால், போக்குவரத்தும் பல இடங்களில் முடங்கியுள்ளது.. ஏர்போர்ட்டிலும் மழைநீர் தேங்கியதால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது... ஆக, சாலை, ரயில், விமான போக்குவரத்துகள் மொத்தமாகவே நின்றுபோய், சென்னையே முடங்கிவிட்டது.. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்..

மாடிவீடுகள்
தரைதள வீடுகளில் உள்ளவர்கள் மாடிவீடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.. மாடி வரை வெள்ளநீர் தேங்கி தத்தளிப்பவர்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்... இதனிடையே 2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பலத்த மழை, வெள்ளம் காரணமாக சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது... இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அறிவிப்பு
அதில், "சென்னையில் அரசு அலுவலங்களுக்கு 08.11.21 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை அலுவலகம் வழக்கம் போல் செயல்படும். தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

மீட்பு பணி
அதன்படியே, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது... ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டு வருகிறது.

சோகம்
இந்த திடீர் கனமழையை சென்னை மக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை... வீடுகளுக்குள் நீர் புகுந்ததால், பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன... தண்ணீரை பாத்திரங்களை கொண்டு வெளியேற்றி வருகின்றனர்.. சில இடங்களில் மழைநீருடன் விஷப்பூச்சிகளும் வந்துவிட்டதாம்.. அவைகளுடன் கிலியில் போராடி கொண்டிருக்கின்றனர் மக்கள்.. சிலர் வீடுகளை பூட்டிவிட்டு, தங்களுடைய சொந்தக்காரர் வீடுகளுக்கு படையெடுக்கிறார்கள்.. மேலும் பலர் நிவாரண முகாம்களுக்கு விரைந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications