முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம்.. 30 இளைஞர்களுக்கு 30 நாள் பயிற்சி.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் 'புத்தாய்வு திட்டம்' குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
இதன்படி இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

30 இளைஞர்கள்
இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு ரூ. 5.66 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

திட்டம் அறிமுகம்
இந்த நிலையில் தமிழக அரசு இரண்டாண்டு கால தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

30 நாட்கள் வகுப்பறை பயிற்சி
இந்தத் திட்டம் திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும்.

மடிக்கணினிகள் வழங்கிய ஸ்டாலின்
இதை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ரகுபதி, பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications