சர்ச்சைக்குரிய தீபாவளி ஸ்வீட் டெண்டர்...மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு-அமைச்சர் குடும்பம் அதிர்ச்சி!
சென்னை: தமிழக அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான தீபாவளி ஸ்வீட்டை ஆவின் நிறுவனத்திடமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் தனியார் நிறுவனம் ஒன்றிடம் டெண்டருக்கு கமிஷன் பேசியிருந்த அமைச்சர் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஸ்வீட் வழங்குவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ நெய் ஸ்வீட் ரூ500 என்ற அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் டெண்டர் வழங்கப்பட்டது.

ஆவின் புறக்கணிப்பு,
அதேநேரத்தில் ஸ்வீட்டுகளை தயாரிக்கும் ஆவின் நிறுவனத்தை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்தனர். ஆவின் நிறுவனமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது.

அமைச்சர் குடும்பம் தலையீடு
தற்போதைய திமுக ஆட்சியிலும் முந்தைய அதிமுக அரசின் பாணியை கடைபிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தீபாவளி இனிப்புகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் தர வேண்டும் என அமைச்சர் ஒருவரது குடும்பத்தின் தலையீடு இருந்ததாம். அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திடம் இனிப்புகளை கொள்முதல் செய்தால் அந்நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்குமே என்கிற அதிகாரிகளின் யோசனையை அமைச்சரின் குடும்பம் நிராகரித்துவிட்டதாம்.

டெண்டர் திருத்தம்
அத்துடன் அந்த தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதற்காகவே டெண்டர் விதிகளும் அமைச்சர் குடும்பத்தின் தலையீட்டால் மாற்றப்பட்டதாம். இதனையும் அதிகாரிகள் எதிர்த்துள்ளனர். தீபாவளி கொள்முதலில் சிறிய நிறுவனங்கள் ஆங்காங்கே உள்ள போக்குவரத்து கழகங்களில் ஆர்டரைப்பெற்று சப்ளை செய்து வந்தன. இவை அனைத்தும் லட்சக்கணக்கான ரூபாய் ஆர்டர்களே. ஆனால் திடீரென இந்த டெண்டர்களில் பங்குபெற குறைந்தப்பட்சம் ஆண்டுக்கு ரூ.100 கோடி டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற வேண்டும் என விதி திருத்தப்பட்டது. ஒரு நிறுவனத்துக்கு சார்பாக இப்படி டெண்டர் விதிகளை மாற்றினால் சட்ட சிக்கல்கள் வரும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஆனாலும் அமைச்சர் குடும்பத்தினர் இதனைப் பற்றி கவலைப்படவில்லை என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

முதல்வர் ஸ்டாலின் அதிரடி
இது தொடர்பாக ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன. மேலும் புதிய டெண்டர் விதிகள் திருத்ததால் சிறிய நிறுவனங்கள் பங்கேற்பது இயலாமல் போவதும், மிகப்பெரிய ஒரே நிறுவனம் மட்டுமே பங்குபெற வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது, இதன்மூலம் மிகப்பெரும் பர்சன்டேஜ் கமிஷனாக பெறப்படும் வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மறுபுறம் அரசின் ஆவின் நிறுவனம் இருக்கும்போது அங்கு கொள்முதல் செய்யாமல் தனியாரை நோக்கி ஏன் புதிய திமுக அரசும் செல்லவேண்டும் என்கிற வாதமும் வைக்கப்பட்டு முதல்வர் தலையிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரணை நடத்தி இருக்கிறார். இதனையடுத்து தற்போது அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனடிப்படையில் ஆவின் நிறுவனத்திடமே இனி தீபாவளிக்கான இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். இதன்மூலம் வெளிப்படையான டெண்டருக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பளித்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கமிஷன் தொகை லம்ப்பாக கிடைக்கும் என கனவில் மிதந்த அமைச்சர் குடும்பம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications