பாசத்தை பொழியும் போது கனிமொழி.. நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழி! தங்கையை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்
சென்னை: பாசத்தைப் பொழியும்போது கனிமொழியாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் கனிமொழி எம்பி எனவும், இந்திய ஜனநாயகம் காக்க இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாகச் செயல்பட்டு வருகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் கலைஞர் 100 - வினாடி-வினா' போட்டி பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் பங்கேற்ற நிலையில், இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," லட்சம் பேரைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் படிக்க வைத்து - புதிய சிந்தனையாளர்களை உருவாக்கியிருப்பதன் மூலம் கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. திராவிட இயக்கக் கருத்துகளை இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில் நடத்தப்பட்ட, "கலைஞர் 100 - வினாடி-வினா" போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
தமிழ்ச் சமுதாயத்தை அடிமைப்படுத்தியவர்களையும் - தமிழினத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடை செய்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் இருந்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவுப் பார்வையில் சுயமரியாதை உணர்வுடன் வினா எழுப்பியவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். வினா எழுப்பியதோடு இல்லாமல், அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி - தமிழ்ச் சமுதாயத்திற்கான விடியலாகவும் - முன்னேற்றத்திற்கான விடையாகவும் இருந்தார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!
எனவே, தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் வினாடி-வினா போட்டி நடத்தி, "எங்கே திராவிடப் பட்டாளம்?" என்று கேட்பவர்களுக்கு - "இதோ இங்கே!" என்று அடையாளம் காட்டியிருக்கிறார் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி அவர்கள்!
'கலைஞர் 100' மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் - தமிழினமும் 'கலைஞர் 1000'கூட கொண்டாடும்! ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு 'லைஃப்' கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் 'லைவ்'-ஆக இருக்கிறார். தலைவர் கலைஞரின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், "ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனுடைய மரணத்தில் இருந்துதான் கணக்கிடப்பட வேண்டும்" என்று சொல்வார். அப்படி, நிறைந்த பிறகும், தமிழர் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!
தலைவர் கலைஞர் அவர்கள் கட்சி எல்லைகளைக் கடந்து - அரசியல் எல்லைகளைத் தாண்டி - இன்றைக்கும் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவராக - இந்தியாவின் அரசியல் அடையாளமாக - நிர்வாகத் திறமையின் இலக்கணமாக அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்! அதை வெளிக்காட்டும் விதமாக - இந்தப் போட்டியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய கழகத் துணைப் பொதுச்செயலாளர் - நாடாளுமன்றக் குழுத் தலைவர் - என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்!
பாசத்தைப் பொழியும்போது, கனிமொழியாகவும் - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் பேசும்போது, கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் கனிமொழி அவர்கள். நீங்கள் அனைவரும் கனிமொழி அவர்களுடைய நாடாளுமன்றப் பேச்சுகளைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்... திராவிட இயக்கத்தின் கொள்கையை - சமூகநீதி வரலாற்றை - சுயமரியாதை சமதர்ம உணர்வுகளோடு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகம் காக்க இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாகச் செயல்பட்டு வருபவர்தான் நம்முடைய தங்கை கனிமொழி அவர்கள்.
மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த நிகழ்ச்சிக்குப் பெரும்பங்கு அளித்திருக்கிறார். உண்மைதான், கனிமொழியே இங்கு சொன்னார். நிதித்துறை அமைச்சர் என்கிற காரணத்தாலோ என்னவோ, பெரும்பங்கு அவருக்கு எப்போதும் உண்டு! இவ்வளவு பெரிய போட்டியைத் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது சாதாரண செயல் அல்ல... எப்படி இந்தப் போட்டியை இவ்வளவு சிறப்பாக நடத்தினீர்கள் என்று தங்கை கனிமொழியிடம் நேற்று முன்தினம் கேட்டேன்.. அவருடைய பதில் என்னை மலைக்க வைத்தது..
இது வாட்ஸ்அப் யுகம்! வாட்ஸ் அப்-இல், யாரோ ஃபார்வேர்டு செய்யும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட முடியாது. அவர்களுக்கு கேப்சூல் மாதிரி வரலாற்றை திரட்டி நாம் புகட்ட வேண்டும். அதற்கு, இதுபோன்ற போட்டிகள் மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும்.
பேசிப் பேசி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். எழுதி எழுதி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். அப்படிப் பேச்சாளர்களை - எழுத்தாளர்களை இளந்தலைமுறையில் இருந்து உருவாக்க வேண்டும். புதிய புதிய செய்திகளை - புதிய புதிய கோணத்தில் சொல்ல வேண்டும். சொல் புதிது - சுவை புதிது - பொருள் புதிது - என்ற வகையில சொல்ல வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications