தமிழ்நாடு நாள்- அரசாணை பிறப்பிக்கும் முன் ஆலோசனை நடத்துங்க-மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை: ஜூலை 18 தமிழ்நாடு நாள் என அரசாணை பிறப்பிக்கும் முன்பாக பல்வேறு தரப்பினருடன் கலந்தாய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழர் நிலத்துக்கு தமிழ்நாடு எனத் தமிழின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளை தமிழ்நாடு நாள் எனக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும். நவம்பர் 1-ஆம் நாள் எல்லைக் காவலர்கள் 110 பேருக்குச் சிறப்பு நேர்வாக 1 லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

ஸ்டாலின் அறிவிப்பால் விவாதம்
முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு கடும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர்கள் அனைவரும் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்; தமிழ்நாடு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ந் தேதியை வேறு ஒரு விழாவாக கொண்டாடலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ட்விட்டரிலும் தமிழ்நாடுநாள் நவ.1 என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

வேல்முருகனின் கோரிக்கை
தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ.வும் ஏற்கனவே நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்க வேண்டும். இதற்காக, அரசியல் கட்சிகளையும், அரசியல் இயக்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்துவதோடு, தனிக்கொடியை உருவாக்குவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என கூறியிருந்தார்.

திருமாவளவன் வேண்டுகோள்
தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முதல்வரின் நேற்றைய அறிவிப்பு குறித்து மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சித் தலைவர்கள், எல்லைமீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. மாண்புமிகு முதல்வருக்கு @mkstalin எமது வேண்டுகோளாக முன்வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி?
கடந்த அதிமுக அரசில் தமிழ்நாடு நாள் என நவம்பர் 1-ந் தேதி அறிவிக்கப்பட்டு அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. பல்வேறு தலைவர்களும் நவம்பர் 1-ந் தேதியையே தமிழ்நாடு நாள் என கொண்டாட வேண்டும் என்றனர். ஆனால் நவம்பர் 1-ந் தேதி மொழிவாரி மாநில பிரிவினையால் தமிழகம் நிறைய பகுதிகளை இழந்திருக்கிறது.. ஆகையால் தமிழ்நாடு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ந் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க பேரவையின் செயலர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இதனை ஏற்றுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications