10 அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்செட்- காத்திருக்கும் 'டோஸ்'
சென்னை: துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தாமலேயே இருக்கும் 10 அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி அடைந்திருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் இந்த 10 அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுப்பார் எனவும் கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் இதுவரை பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் நாடு முழுவதும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கேரளாவில் பாராட்டு
கேரளாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு ரூ4,000 நிதி உதவி தொடங்கி பல்வேறு திட்டப் பணிகளின் பட்டியலை வாசித்துவிட்டு.. இதை எல்லாம் செய்தது கேரளா முதல்வர் பினராயி விஜயன் அல்ல. தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று பாராட்டி இருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் கவனத்துடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக புகழாரம்
அதேபோல் சட்டசபையில் புகழ்ச்சிகளுக்கு தடை விதித்து ஆரோக்கியமான அரசியலுக்கும் வழிகாட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனால்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், இப்படி ஒரு கன்னியமான சட்டசபை கூட்டத்தை பார்த்தது இல்லை. எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தவறு செய்தாலும் முதல்வர் ஸ்டாலினே எழுந்து மன்னிப்பு கோருகிறார் என புகழ்ந்து தள்ளியிருந்தார்.

வீண் செலவுகள் தவிர்ப்பு
மேலும் தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக இ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல் என்பது இல்லாமல் அதிமுக ஆட்சிக் கால நல்ல செயல்பாடுகள் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ13 கோடி பணம் வீணாகக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களுடனான புத்தகப் பைகளை தொடர்ந்து வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்ததும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அமைச்சர்கள் செயல்பாடு
இப்படி நாலாபக்கமும் பாராட்டு மழையில் முதல்வர் ஸ்டாலின் நனைந்தாலும் எங்கேயும் சில கறைகள் இருக்கத்தானே செய்யும். அப்படித்தான் அமைச்சர்களில் 10 பேரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். அப்படி என்னதான் செய்தார்கள் அந்த 10 அமைச்சர்கள் எனில் அவர்களைப் பொறுத்தவரை தங்களுக்கான தனிப்பட்ட ஆதாயங்களைத்தான் பார்க்கிறார்களாம். துறைசார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டு பணியாற்றுவதில் படுசுணக்கம் காட்டுகிறார்களாம். தங்களது துறைகளின் உயர் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்களாம். இவை அனைத்தும் ரிப்போர்ட்டாக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம்.
Recommended Video

காத்திருக்கிறது டோஸ்
இந்த 10 அமைச்சர்களில் சீனியர்களும் சிலர் இருக்கிறார்களாம்.. அவர்களது ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு இவங்க இன்னும் மாறாமலேயே இருக்கிறார்களே? என வேதனைப்பட்டாராம் முதல்வர் ஸ்டாலின். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று அமைச்சரவையில் சேர்த்தால் இப்படியா செயல்படுவது? என சில ஜூனியர் அமைச்சர்கள் மீது கோபத்தை காட்டினாராம் முதல்வர் ஸ்டாலின். சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் 10 அமைச்சர்களுக்கும் செம டோஸ் கிடைக்கவே வாய்ப்பு உள்ளது என்கின்ற தலைமைச் செயலக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications