இதைவிட கட்சி துரோகம் இருக்கவே முடியாது.. அதிருப்தி திமுக நிர்வாகிகளுக்கு குட்டு வைத்த ஸ்டாலின்!
சென்னை: திமுக உட்கட்சி தேர்தல்களில் பதவி கிடைக்காதவர்கள், கிடைத்தும் சக நிர்வாகிகளுடன் பேசிக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு திமுக பொதுக்குழுவில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 15-ஆவது தேர்தல் என்பது பல மடங்கு பலத்தை நமக்குக் கொடுத்துள்ளது. பல்வேறு பொறுப்புகளுக்கு தகுதி படைத்த பல லட்சம் பேர் இருக்கிறார்களே என்ற மகிழ்ச்சியை இந்தத் தேர்தல் எனக்கு அளித்துள்ளது. இந்த அரங்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - புதிய நிர்வாகிகள் பலர் வந்துள்ளீர்கள். பழைய நிர்வாகிகள் பலரும் இருப்பீர்கள்.

பொறுப்பு மிக பெரியது
காலம் உங்களுக்குச் சில கடமைகளைச் செய்வதற்குக் கொடையாக இந்தப் பொறுப்புகளை வழங்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் மட்டுமே தகுதி படைத்தவர்கள் - வேறு யாரும் இல்லாததால் இந்தப் பொறுப்புக்கு நீங்கள் வந்துவிடவில்லை. உங்களைப் போல லட்சக்கணக்கானவர்கள் இந்தத் தமிழினத்துக்கு உழைக்க - சுயமரியாதையைக் காக்க காத்திருக்கிறார்கள். நீங்கள் பொறுப்புக்கு வந்திருப்பதால், அவர்கள் உங்கள் தோளோடு தோள் நின்று களப்பணியாற்ற - இனமானம் காக்க துணை நிற்கப் போகிறார்கள். எனவே, உங்கள் பொறுப்பும் கடமையும் மிகமிகப் பெரியது. அதனை மறந்துவிடாதீர்கள்!

இரக்கத்தாலும் பொறுப்பு நீட்டிப்பு
எந்தப் பொறுப்பாக இருந்தாலும் அதனை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் பொறுப்புகள் தொடரும். கடந்த பத்தாண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருந்தபோது - பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில் சிலர் தொடரட்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் முடிவெடுத்தோம். அப்போது கூட நம்முடைய முதன்மைச் செயலாளர் நேரு அவர்கள் - என்னிடம் - 'நீங்க ரொம்ப Soft ஆயிட்டீங்க தளபதி' என்று சொன்னார். இரக்கத்தால் கூட சிலருக்குப் பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டு இருக்கலாம்

கட்சியை வலிமைப்படுத்தும் பொறுப்பு
இதன் காரணமாகப் புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை என்பதும் உண்மைதான். அப்படி வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வருந்தவேண்டாம். வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படவுமில்லை, நீங்கள் மறக்கப்படவுமில்லை என்பதை தனித்தனியாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். பொறுப்பில் அவர்கள் உட்கார வைக்கப்படவில்லை என்றாலும் - கழகத்தை வலிமைப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது.

இதுதான் கட்சிக்கு துரோகம்
புதிய நிர்வாகிகள் - பொறுப்புக்கு வர இயலாத அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். அனைவர் ஆலோசனையையும் பெறுங்கள். சிலர் மற்ற நிர்வாகிகளோடு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை என்று நான் கேள்விப்படுகிறேன். இதை விட கட்சித் துரோகம் எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications