சென்னையில் விபி சிங் சிலை..இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! சிறப்பு விருந்தினராக அகிலேஷ்
சென்னை: இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு புதிதாக அமைக்கப்பட்டு உள்ள திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மேனாள் இந்தியப் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவுருவச்சிலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில், மேனாள் இந்தியப் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னை மாநிலக் கல்லூரியில் ரூபாய் 52 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காலை 11.00 மணியளவில் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்கள்.
விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள் 1931 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் நாள் அலகாபாத் நகரில் ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியிலும், பின்பு புனே பெர்குஷன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்பு, 1950 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். மேலும், இவர் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களை தானமாக வழங்கினார். வி.பி.சிங் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர். வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளையும் வகித்தார். இதனைத் தொடர்ந்து, 1980 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று உத்திரபிரதேச மாநில முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறந்த முதலமைச்சராக திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, வி.பி.சிங் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்தார். பின்பு, 1989 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வதார பிரச்சனையான காவிரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தார்.
சென்னையில் அமைந்து உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வி.பி.சிங் அவர்களை பற்றி குறிப்பிடும் போது "அரசியல் நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும். உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவர்" என்று கூறினார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக B.P. மண்டல் அவர்கள் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் ஆவார்.
இத்தகைய சிறப்புமிக்க மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அன்னாரது திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அமைச்சர் பெருமக்கள், அன்னாரது குடும்பத்தினர்கள், நாடாளுமன்ற. சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன்படி இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் விபி சிங்கின் திருவுருவ சிலையை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் திறந்து வைத்தார். இதில் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு அமைச்சர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.












Click it and Unblock the Notifications