நான் பிரதமரிடம் தெளிவாக சொல்லிட்டேன்.. அதில் மாற்றம் கிடையாது.. ஓபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
சட்டப்பேரவையில் முதல்வர் அதிமுகவிடம் கேள்வி எழுப்பினார்
சென்னை: "விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்லும் நீங்கள், ஆட்சியில் இருக்கும்போது, எதிர்த்து தீர்மானம் கொண்டு வர தயக்கம் காட்டியது ஏன்? பிற மாநிலங்களில் தீர்மானம் கொண்டு வந்தபோது, நீங்கள் ஏன் கொண்டு வரவில்லை?" என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது முதல்வர் பேசியபோது, "மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் மூன்று சட்டங்களும் உள்ளன. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்ற எழுச்சிமிகுப் போராட்டம் நடந்தது இல்லை. ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டுவந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது" என்றார்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிப்பு.. சட்டசபையில் அமைச்சர் நாசர் தகவல்!
எதிர்ப்பு
இதையடுத்து, முதல்வர் முன்மொழிந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, தாவக (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன... ஆனால் அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விளக்கம்
அப்போது பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அனைவரும் உள்ளோம்... ஆனால் வேளாண் சட்டங்களில் உள்ள உண்மையான சாதக பாதகங்களை, விவசாயிகளிடம் அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லலாம்.. சட்டமன்ற குழுவை அழைத்து சென்று மத்திய அரசை நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்கலாம்" என்றார்.
ஸ்டாலின்
ஓபிஎஸ் பேசும்போது, அதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "ஏதோ எங்களை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு நீங்கள் அந்த கருத்தை சொல்கிறீர்களா? என்று எதிர்க்கட்சி துணை தலைவர் சந்தேகத்தை எழுப்பினார்.. இந்த தீர்மானத்தில்கூட ஒருமனதாக என்றுதான் போட்டிருக்கோம்.. நீங்களும் அதை ஏற்றுக்காள்வீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம்.. நீங்கள் அந்த தீர்மானத்தில் உள்ள வாசகத்தை கூட பார்க்கலாம்..
தீர்மானம்
அந்த தீர்மானத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறோம்.. ஆனால், இருந்தாலும் பிஜேபி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார்கள்.. அதனால் சபையில் இருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துதான் ஒருமனதாகவா? அல்லது பெரும்பான்மையாகவா என்று கணக்கு போட முடியும்.. ஆதலால் இதை ஏற்று கொள்கிறீர்களா, இல்லையா என்பதை மாத்திரம் நம்முடைய எதிர்க்கட்சி துணை தலைவர் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
பிரதமர்
விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம், உழவர்களுக்காக போராடுகிறோம், பாடுபடுகிறோம் என்றெல்லாம் சொன்னீர்கள்.. ஏற்றுக் கொள்கிறேன்.. பிறகு, நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, ஏன் இதை எதிர்த்து அல்லது திரும்ப பெற வேண்டுமென்று தீர்மானத்தை நிறைவேற்றவில்லை? பல மாநிலங்களில் இருக்கக்கூடிய சட்டமன்றங்களில் தீர்மானம் போட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சட்டங்கள்
ஆனால், உழவர்கள் பக்கம் நாங்கள் எப்போதும் இருப்போம், இருப்போம் என்று சொல்லி கொண்டிருக்கக்கூடிய நீங்கள் இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஏன் தயங்கினீர்கள்? அதில் என்ன தயக்கம்? ஆதலால் நீங்கள் செய்ய முடியாததை நாங்கள் இப்போது செய்கிறோம்.. அதனால் இதை நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
டெல்லி
முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டதற்கு பிறகு டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தபோது, இதைபற்றி தெளிவாக சொல்லி இருக்கிறேன்.. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.. அப்போதே சொல்லியிருக்கிறோம்.. இதுவரை அதற்கு எந்தவிதமான பதிலும் கிடையாது.. ஆகவே, இதற்கிடையில்தான் இந்த தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று தேர்தல் நேரத்தில் நாங்கள் மக்களிடத்தில் வாக்குறுதி அளித்திருந்தோம்.. எங்களது வாக்குறுதிகளில் அதுவும் ஒன்று..
ஆதரவு
திமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்காக சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டு வருவோம், போராடுகிற விவசாயிகளே எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.. 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென்று தீர்மானத்தை சட்டமன்றத்திலே கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த உறுதிமொழிகளைதான் தொடர்ந்து படிப்படியாக நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.. எனவே, இங்கு நீங்கள் ஆதரவு தர வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.