நீதியரசர் ஏஆர் லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி, ஸ்டாலின்,டிடிவி தினகரன் இரங்கல்
முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நீதியரசர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி, எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்டவர் முன்னாள் நீதியரசர் லட்சுமணன். பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தவர் என்று முதல்வர் பழனிச்சாமி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மறைந்த
நீதியரசர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி, எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ஏ.ஆர்.லட்சுமணன், உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 78. இறுதிச்சடங்குகள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளன.
சட்ட ஆணைய தலைவராக இருந்த நீதியரசர் லட்சுமணன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பான வழக்கில், உயர்மட்டக்குழுவில் தமிழகம் சார்பில் இடம்பெற்றிருந்தார். பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர்
மறைந்த ஓய்வு பெற்ற நீதியரசர் லட்சுமணனுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவரது மனைவி திருமதி மீனாட்சி ஆச்சி கடந்த இரு தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மனைவியின் மரணத்தினால் கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்த ஏ.ஆர் லட்சுமணன் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. மீனாட்சி ஆச்சி இறந்த 48 மணி நேரத்திற்குள் ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்..!
இந்நிலையில் நீதியரசர் லட்சுமணன் குடும்பத்தினருக்கும், நீதித்துறையினருக்கும் முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்டவர் முன்னாள் நீதியரசர் லட்சுமணன். பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தவர் என்று தெரிவித்துள்ளார்.
நீதியரசர் லட்சுமணன் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவு செய்துள்ளார்.
நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து சொல்லொணாத் துயரடைந்தேன்! உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பது உட்பட புகழ்மிக்க பல பரிந்துரைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியவர்!அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும், இரங்கலும்! என்று பதிவிட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர்.லட்சுமணன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். நீதித்துறையில் பல்வேறு நிலைகளில் சிறப்புற பணியாற்றிய அவர், முக்கியமான பல தீர்ப்புகளையும் வழங்கியவர். அன்னாரது மறைவால் வாடும் அவரது மகனும் மூத்த வழக்கறிஞருமான ஏஆர் எல் சுந்தரேசன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்