தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்! ஆளுநர் ரவிக்கு கொடுத்த பரிசு.. யார் யார் பங்கேற்பு?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் வழங்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
சுதந்திர தினத்தன்று, ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கம். அந்தவகையில் இன்று நாட்டின் 78வது சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், திமுக இந்த ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், திமுக சார்பில் ஆளுநரின் தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்கமாட்டார்கள், ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார். திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆனால் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் பங்கேற்போம் என அறிவித்திருந்தது.
இன்று சென்னை கோட்டையில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். எனவே, முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளுநரின் அழைப்பை ஏற்று ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் அரசு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கச் சென்ற முதல்வரை ஆளுநர் ரவி வரவேற்றார். ஆளுநர் ரவிக்கு சால்வை அணிவித்து வ.உ.சிதம்பரனார் புத்தகத்தை பரிசளித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த தேநீர் விருந்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக சார்பில் ஜெயக்குமார், பெஞ்சமின், பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்படுவதாக கூறி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications