முதல்வர் மருந்தகம்! அடுத்த ஆண்டு பொங்கல் முதல் குறைந்த விலையில் மருந்து வாங்கலாம்- ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் மருந்துகளுக்கு ஆகும் செலவை குறைத்து ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவிடும் வகையில் அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின், சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1000 மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
78 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார்.

இதையடுத்து அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டியுள்ளதால் மாதா மாதம் கட்டாயம் வாங்க வேண்டிய மருந்துகளில் இவையும் இடம் பெற்றுள்ளன. சிலர் காசு கொடுத்து இந்த மருந்துகளை வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதனால் குறைந்த செலவில் ஏழைகளும் மருந்துகளை வாங்கி பயன்பெற முதல்வர் மருந்துகம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். அடுத்த ஆண்டு 2025 பொங்கல் திருநாளின் போது இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு ரூ 3 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படும். இந்த விழாவில் அவர் மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார். அவர் பேசுகையில் தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகிறோம்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள மட்டுமல்ல ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாளாகும். சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டத்தால் நாள்தோறும் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.
பெண்களுக்கான விடியல் பயண திட்டம், உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவை பெண்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் நலன்காக்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் படை வீரர்கள் வங்கிகளில் ரூ 1 கோடி வரை கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படும். தியாகிகள் ஓய்வூதியம் ரூ 21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ 11, 500 ஆக அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications