"கரும்பில்லாத பொங்கலா?".. 20 பொருள் தொகுப்பில் முழுக் கரும்பும் வழங்கப்படும்- அமைச்சர் அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழுக் கரும்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் 20 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கும் இந்த தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வெல்லம்
அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 20 பொருட்கள் துணிப்பையுடன் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ. 1088 கோடி நிதியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

பச்சரிசி
இதற்கு முந்தைய அதிமுக அரசு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை, ஒரு துண்டு கரும்பு, ரூ 2000 ரொக்கமும் வழங்கியது. இதன் மூலம் 2.06 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றனர். ஆனால் இந்த முறை 20 பொருட்களுடன் பொங்கலுக்கு முக்கிய பொருளான கரும்பு இல்லாமல் இருந்தது.

முழுக் கரும்பு
இதனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் மூலம் நலிவடைந்த நிலையில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதால் இந்த கோரிக்கை விவசாய சங்கங்களால் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக் கரும்பையும் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாஸின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

பொங்கலுக்கு முழுக் கரும்பு
இதுகுறித்து தலைமை செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், பொங்கலுக்கு வழங்கப்படும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் முழுக் கரும்பை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் பொங்கல் பரிசு ரூ 2000 எப்போது கொடுப்பீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications