மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த உயர்மட்ட குழு! அமைச்சர் ரகுபதி விளக்கம்
சென்னை: இன்று சட்டப்பேரவையில், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இது பற்றி அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியதாவது, "மாநில அரசுகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. மத்திய அரசிடமிருந்து எந்தெந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது. இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இன்று முதல் மு.க.ஸ்டாலின் புதிய கமிட்டியை அறிவித்திருக்கிறார்.

இந்த குழுவில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப், அசோக் வர்தன் செட்டி, நாகநாதன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். மாநில அரசுகள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் என்ன? அவை எந்தெந்த உரிமைகளை இழந்திருக்கின்றன. இதனால் மாநிலங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றன? என்பதை இந்த குழு எடுத்துரைக்கும். ஏற்கெனவே ராஜாமன்னர் கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை கொடுத்திருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறது.
மத்திய அரசும் இதற்காக பூஜ் கமிட்டி, சர்க்காரியாக கமிட்டி போன்றவற்றை அமைத்திருக்கிறது. இந்த கமிட்டிகளெல்லாம் அப்படியே இருக்கிறதே தவிர, நம்முடைய உரிமைகள் எதுவும் மீட்கப்படவில்லை.
இன்றைக்கு கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. இந்த துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும். ஆனால், அதை கூட அவர்கள் செய்ய மறுக்கிறார்கள். மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருப்பதால், நமக்கு தர வேண்டிய தொகையை அவர்கள் தர மறுக்கிறார்கள். 100 நாட்கள் வேலை திட்டத்தில் 3-4 மாதங்களுக்கான ஊதியம் அப்படியே நிலுவையில் இருக்கிறது.
நாம் ஜிஎஸ்டி வரி பகிர்வாக 1 ரூபாய் கொடுக்கிறோம். ஆனால் அவர்கள் வெறும் 29 பைசாவைத்தான் திருப்பி தருகிறார்கள். இதே பீகார், உத்தரப் பிரதேசத்திற்கு அதிகமாக கொடுக்கிறார்கள். நாங்கள் அதிகமாக கூட கேட்கவில்லை. கொடுக்கும் ரூபாயிலிருந்து பாதி, அதாவது ரூ.50 பைசா அளவுக்காவது உயர்த்திக்கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
நிலைமை இப்படி இருக்க, மத்திய அரசு 29 பைசா தருவதையே பாஜகவின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் பெருமையாக சட்டமன்றத்தில் கூறுகிறார். உ.பிக்கும் பீகாருக்கும் இவ்வளவுதான் தருகிறீர்களா என்ன? எனவே மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளின் உரிமையை பாதுகாக்க, கேட்டு பெற இந்த கமிட்டி உதவும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications