கடலூர் அருகே கபடி விளையாடிய போது உயிரிழந்த வீரர்! ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கபடி விளையாடிய விமல்ராஜ் என்ற வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Recommended Video
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (வயது 21) என்ற இளைஞர் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்த திரு.சஞ்சய் (எ) விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குமாறு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தது கவனிக்கத்தக்கது.
கபடி விளையாடிய போது பரிதாபமாக உயிரிழந்த விமல்ராஜ் என்ற வீரர், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் முறைப்படி பயிற்சி பெற்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கபடி விளையாட்டில் மிகப்பெரும் ஜாம்பவனாக வர வேண்டும் என்ற இலக்கு கொண்டவராக இருந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications