தென் சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.. நாளை முதல் நாவலூர் டோல் கட்டணம் ரத்து- முதல்வர் அதிரடி
சென்னை: சென்னை அருகே நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் களஆய்வு ஆலோசனை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்இந்த நல்ல தருணத்தில் நான் இரு முக்கிய அறிவிப்புகளை இந்த கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன். தென் சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவியேற்றவுடன் ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி சுங்கச் சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதி வழியாக செல்வோரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தார்கள்.
தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதனால் சாலையின் பலப்பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இதே சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையேற்று நாளை முதல் நாவலூர் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அடுக்குமாடி குடியிருப்பு, பொதுக் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ 8 லிருந்து ரூ 5.50 காசாக குறைக்கப்படுகிறது. அதாவது 10 வீடுகளுக்கும் குறைவாக 3 மாடிகளுக்கும் மிகாத, மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.
சிறு குடியிருப்புகளுக்கான பொது விளக்கு, மின் மோட்டார்களுக்கு சலுகை கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. வளர்ச்சி திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் திட்டப்பணிகளை முடிக்காவிட்டால் செலவும் அதிகரிக்கும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். விளிம்பு நிலை மக்கள், பட்டியலினமக்களுக்கான திட்டங்கள் விரைவில் அவர்களை சென்றடைய வேண்டும்.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் உள் கட்டமைப்பு பணிகள் பெரும் முதலீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் சென்னையில் இருக்கக்கூடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் என நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications